Saturday, August 20, 2011

இந்தக் கிரீஸ் குழு...

அரச ஆதிக்கம்-அரச ஜந்திரம்...

ஆதி ஆதித்யன் :
" இது சம்மந்தமான குறிப்பில் கலையரசன் என்பவர் அதிகளவில் கொக்கரித்துக் கொண்டிருந்தார். யாருக்கு எப்படியான ஆபத்து இருக்கிறது என்பதற்கப்பால் இந்த பிசாசுகளின் பின்னணியில் சிங்கள ராணுவம் இருக்கிறது என்பதை அடியோடு மறுத்து வந்த கலையரசன் என்பவர் சிறிலங்கா அரசின் முகவர் என்பது பின்புதான் தெரியவந்தது. அவர் நீண்டகாலமாக அந்த வேலைதிட்டத்தில் ஈடுபட்டுவருவதாக சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர். ... ......"

Parani Krishnarajani முக நூற்றட்டியில்

பரணி, அரச ஆதிக்கம்,அரச ஜந்திரம்,அதன்வழி மக்கள் விரோதங்கள் குறித்து நிறையப் பலர் எழுத முடியும்.இனவழிப்பில் அதீத தேவையை வற்புறுத்தும் சிங்கள ஆளும் வர்க்கத்தினது நலன்களின்வழி அரச ஆதிக்கமானது பெரும்பகுதிச் சிங்களப் பாமரர்களைத் தொடர்ந்து கட்டிப் போடுவதில் பல காரியங்களைச் செய்வதை நாம் சமீப காலமாகப் பார்த்து வருகிறோம்.இது பாராளுமன்ற ஆட்சியின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதில் பண்டுதொட்டியங்கிய வியூகத்தின் இன்னொரு வகைமாதிரியானது.

எழுத்தில் அந்ததந்தக் காலத்து அரசியல் அராஜகங்கள்-போக்குகள் குறித்துப் பதிவது அவசியம்.

நீங்கள் பதிந்ததும் அவசியம்.

ஆனால்,அதை வெட்டிக் கருத்தாடுபவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதாம்.

கருத்துகளைக் காலம் தீர்மானித்துக்கொள்ளும்.

புலிவழி "தமிழீழம்"சாத்தியமென்றும்,காரிகாலன் அதைச் செய்து காட்டுவான் என்பதும் தமிழர்களின் 95 வீதமானவர்களின் புலம்பலாக-அவாவாக இருந்தது.இதுள் , பெயருக்குப் பின்னால்-முன்னால் பல பட்டங்களைச் சுமப்பவர்களே பெரிதும் புலம்பிக்கொண்டனர்.

அப்போது,நாம் புலிகள் பூண்டோடு அழிக்கப்படுவர்களெனச் சொன்னோம்.அவ் வேளைகளில் நம்மைக் கடித்துக் குதறிய பெரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களையும் நாம் பார்த்திருந்தோம்.

இது,வரலாற்று இயங்கியலைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் பார்க்காத தொழில்முறைக் கல்வியாளர்களது வினையாக இருந்தது.அவர்களுக்குப் பின்னே ஒருபெரும் வால் கூட்டம் தொடர்ந்து அணிவகுத்துக்கொண்டது.இப்போது,இந்த உதரிவர்க்க "அறிஞர்"குழாம் இருந்த இடம் தெரியாது உதிர்ந்தே போய்விட்டது.

என்றபோதும்,உண்மைகள் முகத்தில் ஓங்கி அறையும்போது,அவர்கள் பெரும் மௌனத்துள் தியானிப்பதும்,அடையாள நெருக்கடி ஏற்படும்போது உரையாடுவதிலும் கவனம் கொள்கின்றனர்.மீளவும்,கருத்தியல்வழியாகச் சிந்திப்பதில் தமது இயலாமைகளை முற்போக்குவாதிகளிடம் கொட்டுவதில் காலத்தைப் போக்குகின்றனர்.

இன்றைய இலங்கையில் நிகழும் அராஜகங்களுக்கு நேரடியாக அரசுமட்டுமே காரணமில்லை.

அரசினது ஆதிக்கத்தை விரிவாக்கும் அந்த அரசினது ரீபிரசென்சுகள்[Representative] நமக்குள்,கிராமத் தலைவர்களாகவும்,எம்.பி. அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.அத்தோடு இராணுவத் தளபதிகளாகவும்.இவர்கள் தத்தமது பதவிகளைக் காப்பதிலும்,தமக்கு எதிராக ஓட்டளித்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்த தமிழ்பேசும் மக்களை ஏதோவொரு வகையில் பழிவாங்கப் பல தளங்களில் இயங்குகின்றனர்.

புலிகளைப் பூண்டோடு அழித்த யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் நகர்ந்தும் இலங்கை இராணுவத்தில் எந்த மாற்றமுமின்றி அது யுத்தக் காலத்துக் கட்டமைப்போடு இருக்கிறது.

இராணுவத் தளபதிகளுக்குப் தமது பதவியின் இருப்பு நிலைப்பட்டாக வேண்டும்.அமைச்சர்களுக்கு(டக்ளஸ் போன்றவர்கள்)த் தம்மை ஏமாற்றிய மக்களைப் பழிவாங்க வேண்டும்.கிராமத் தலைவர்கள் தமது பதவிகளை இராணுவத் தளபதிகளோடிணைந்து காப்பதில் காரியவாதிகளாக இருக்கின்றனர்.

சமூகத்தில் குடிசார் அமைப்புகளது தோற்றம் அவர்களை அச்சப்படுத்தும்போது தமது நிலைகளைக் காப்பதில் கிரிஸ் குழு அது-இதுவென அராஜகம் மேலெழுகிறது.

அரசுக்கு இது தெரிந்தும் அது இராணுவ ஆட்சியைத் திணிப்பதில் கவனஞ் செலுத்துவதும்,கூடவே தமிழ்ப் பிரதேசமெங்கும் வாழும் தாழ்த்தப்பட்ட(தலித்துகள்)மக்களை வென்றெடுத்துத் தனது ஆதிக்கத்தை நிலப்படுத்த விரும்புகிறது.

இவைகளின் கூட்டுவடிவமான இந்த நிகழ்வுப்போக்கை,புலியெதிர்ப்பு அரசசார்ப்புக் கூட்டத்தால் சகிக்க முடியாதுதாம்.அவர்களது எஜமானர்களே அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும்போது,இவை குறித்துப் பெரிதாக விவாதிக்க வேண்டியதில்லை!

ஆனால்,அவர்களது நடிவடிக்கையின் பின்னே உந்தப்படும் அரச ஆதிக்கத்தின் கண்ணிகளை விவாதிப்பதில் கவனமெடுக்கலாம்.அரச ஆதிக்கத்துக்கும்,அரச ஜந்திரத்துக்குமான இருவேறு தளங்களை மிக விரிவாக விளங்கியாக வேண்டும்.

இந்த இரு தளமும் ஒன்றையொன்று காப்பதில் தமது இருப்பையிட்டுப் பாரிய மனிதவிரோதத்தைக் கட்டமைக்கின்றன.அதிலொன்றே இந்தக் கிரீஸ் குழு.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
20.08.11

Tuesday, August 02, 2011

வேளாள முள்ளி வாய்க்கால்,கரையான் முள்ளி வாய்க்கால்....

இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்தவர்களது தலித்துவக் கோரிக்கைகள்.

"Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" By Dr. B.R. Ambedkar

லங்கை அரசு கடற் கண்காணிப்பு வலையத்த்தின் வழி சாதிரீதியகச் சில வகைமாதிரித்தாக்குதலைச் செய்கிறது.அது ஒரு பக்கத் தாக்குலாக வரியும்போது,மறு வார்ப்பாகப் பிற்போக்குத் தேசியத்தின்தோல்வியில் வர்க்க முரண்பாட்டைக்குறித்து இலங்கை அரசு,சிங்கள-தமிழ் மீன்பிடியாளர்களைப் பிளவுப்படுத்துவதில் சில தர்க்கால வெற்றியையும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைப்பதில் இத்தகையத் துண்டு உரையாடலிலுமாக ஒரு பிரச்சனையுள் பல காய்கள் நகர்த்தப்படுகிறது.




இன்று,இலங்கை பூராகவும் நிலவும்(ஏன் இந்தியா பூராகவும்)சாதியமைப்பு, நடைமுறையிலுள்ள சமூக அமைப்பின் உருவாக்கமல்ல. நிலவும் நவகாலனித்துவ அமைப்பு தனது முழுமை பெறாத முதலாளித்துவ வளர்ச்சிக்கொப்பச் சீர்படுத்திக்கொண்ட(தடுத்தாட்கொண்ட)அல்லது திருத்தி அமைத்துக்கொண்ட இலங்கையின்-இந்தியாவின்கடந்தகால நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் ஒரு ஊக்கமாகவே இந்தச் சாதிய அமைப்பு முறை மேலெழுகிறது.

இதைக் குறுக்கி வாசிக்கத் தெரிந்த நீங்களெல்லோரும்,அதையே தனிப்பட்ட வகைமாதிரிக்குள் மொன்னைத் தனமாக விளக்குவதும்,அதையே ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறியும் வினையாக மாற்றுகிறீர்கள்.சாதியமைப்பின் நிலைகளையும்,இன்றைய நிலைக்கான காரணத்தையும் ஆய்வதென்பது கடந்த 200 ஆண்டு வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையைப் பின் தள்ளிவிட்டு, சமீப வரலாற்றில் 60 ஆண்டு அரச முதலாளியத்தின் கடைக்கோடியில் தமிழ்பேசும் சமுதாயத்தைக் கழுமரத்தில் ஏற்றுவது நியாயமான அறிவுப்போக்கல்ல.

பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் தோல்வியோடு தாழ்த்தப்பட்ட மக்களது கழுத்துக்கு வரயிருந்த கயிறு இற்று அறுந்துபோய்விட்ட பின்பும்,சரியான திசையில் இந்த ஆய்வுகளை-கோரிக்கைகளை நகர்த்தமுடியாத நீங்கள், இத்தகைய அரைவேக்காட்டு நறுக்கோடு தமிழ்பேசும் முழுமொத்த மக்களது விடுதலைக்கு வேட்டுவைப்பதில் காலத்தைக் கடத்துவது சாதியத்தை அகற்றும் போராட்டமாகப் படவில்லை!

தமிழ்ச் சமுதாயத்தின் யாழ் மையவாதத்துக்குட்பட்ட தமிழ் மத்தியதரவர்க்கத்தின் இயற்கையான பலவீனத்தினதும்,முன் அநுபவமற்ற உலகியிற் கண்ணோட்டத்தாலும்,இன்னுஞ்சில விஷேக் குணாம்சங்களினது விளைவாலும் இந்த மத்தியதர வர்க்கம் நிலப்பிரபுத்தவப் பிற்போக்குத் தேசிய வாதத்துடன் தமிழீழம் காணப் புறப்பட்டு, புரட்சிகரக் குணாம்சத்தையே எட்டமுடியாது சிக்குப்பட்ட இன்றைய சூழலில் இந்த வகைக் குறுங் கதையாடல் எதையும் சாதிக்காது.இது மேலும்மக்களைப் பிளவுபடுத்தி அதே பிற்போக்குத் தேசிய வாதத்தை வளர்ப்பதிலேயேதாம் முடியப்போகிறது.

இந்தச் சூழலை விளங்கிக் கொள்ள ஒவ்வொரு தொழிற்பிரிவையும் இலங்கை-இந்தியச் சூழலில் புரியும்போது, அங்கே வர்க்க ஒடுக்குமுறையானது சாதியவொடுக்குமுறையாக விரிவதை இனங்காண முடியும்.இதைக் கவனத்தில் எடுப்பதை மறுப்பதென்பது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தின் இருப்பைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதைவிட வேறென்னவாக இருக்க முடியும்?


ஸ்ரீரங்கன்

02.08.11