Wednesday, November 30, 2011

தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்...

மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு...

//விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.//

இரமணியின் முக வாயில் : -Manivannan Ehambaram


தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.


„தலைவர் வல்லவர்;

தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்;

தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்;

தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்!.“


தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் „துரோகத்தின்“பெயரில் நடாத்தி முடித்தது.

நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது:


// புலி எதிப்பாளர்களை நான் நன்றாக அறிவேன் . அவர்களின் குணம் செய்கை என்பவற்றை வைத்து சில கணிப்புகள்

என்னிடம் இருக்கின்றது இது எனது சொந்த அனுபவம் ....நான் சந்தித்த பலரிடம் இருந்து அறிந்தவை....

1 ) வேற்று இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களை இன்னும் விடுதலை விருமிபிகள் என்று சொல்லவதும் ஆனால் புலிகளின் பாதை சரி இல்லை என்றும் ( ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழை என்று சொல்வது) புலிகள் தங்களை போராட விடவில்லை என்றும் சந்தர்ப்பவாதம் பேசுபவர்கள்.

2 ) சுயநல அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளின் நிழலில் இருப்பவர்கள்.

3 ) விடுதலை போராட்டத்தை எதிரிகளின் காலடியில் போட்டுவிட்டு கொள்கை மாறி சுகபோகம் அனுபவிக்கும்
கூட்டம்

4 ) ரகசிய மது மாது போன்ற எல்லா பழக்கத்துக்கும் அடிமைப்பட்ட சிலர் தங்களை புத்திஜீவிகள் என்று சமுதாய அரங்கில் தங்களை ஆய்வாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் காட்டுபவர்...

5 ) எதையும் செய்யாது வீராப்பு பேச்சில் காலம் கழிக்கும் ஒரு சிலர்

6 ) தேசத்துக்கும் பிறமக்கள் துயருக்கும் உதவ மனம் இல்லாதவர்கள் .

7 ) தங்களை விட சிறந்த கல்விமான்கள் இல்லை என்றும் தங்களிடம் இருக்கும் திறமைகளை தாங்களே
புகழும் கூட்டம்.

8 ) பதவி ஆசையும் தன்னலத்துக்காக எதையும் செய்ய துணியும் கூட்டம்....

9 ) எதிரிகளின் கைகூலிகள் , தன தவறை மறைத்து பிறர் மீது குற்றங்களை சுமத்தும் குணம்.

சரியான தகவல் தெரியாது பிறரின் சொல்கேட்டு தவறான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள்...
பிழையான போதனைகளில் வேறு இயக்க அல்லது எதிரி வழியில் செல்பவர்கள்...
அரசியல் சுயநலம் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கு. இப்படியாக பல குணம் இருக்கும்

அனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் எந்நிலையிலும் .........தமிழ் உணர்வு உள்ளவர்கள். தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்



விடுதலைப் புலிகள்.... தூய்மையானவர்கள்... மது ..புகை , பாலியல் ஆசை என்னும் போதைக்கு அடிமை ஆகாத கொள்கை மாறாது அன்றுமுதல் இன்று வரை தாய்மண் விடுதலை நோக்கி பயணிப்பவர்கள்.
ஈழ விடுதலைக்கு எதிராக சொந்த தாய் தாய் உடன்பிறந்தவர் செயல்பட்டாலும் அவரை தேச விரோதிகளாக கணித்து கொல்லும்கொள்ள்கை வெறி அவர்களிடம் இருக்கும். தாய் மண்ணுக்காக வாழும் அனைவரும் விடுதலைப்புலிகள்.....// -Manivannan Ehambaram
http://www.facebook.com/profile.php?id=100000789360672&sk=wall


அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை“எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்“எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.

இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்“தமிழீழக் கோசம்“எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?

இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?

இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?

தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?

சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?

இத்தகைய „தமிழீழ“க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?

இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?

அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?

இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய „மாவீரர்கள்“பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?

தற்போது வன்னியில் முடித்து வைக்கப்பட்ட ஆயுதப் புலிகளது அழிப்போடு சம்பந்தப்பட்ட கயவர்கள் புலிகளுக்குள் தானே முளைவிட்டனர்?கருணாவும்,பிள்ளையானும் மட்டுமல்ல கே.பி.யும் இன்னும் பல புலிகளும்தானே தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்த கயவர்கள்?இவர்களை அம்மானென்றும்,கே.பி.என்றும் செல்லமாக அழைத்த தமிழ்த் தேசியப் பால்குடிகள் மற்றவர்களைத் துரொகியென இப்பவும் வகுப்பெடுப்பதும்,தனிநபர்கள்மீது தப்பான நடாத்தைகளைக் கற்பிக்கவும் முனைகின்றனர்.இது சாபக்கேடா அல்லது புலித்தனமா?மணிவண்ணன் ஏகாம்பரம் போன்ற மடக் கொழுந்துகளுக்கு இது புரியாது போனது ?;புலிகளுக்கு ஆலவட்டம் கட்டும் கொடிய மனதானது யுத்தத்தால் இழந்த இலட்சம் உயிரையும் ஒரு நொடியில் கேவலப்படுத்தி விடுகிறது.

இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?

இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.

மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் „தமிழீழத் தாயகம்“ எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.

தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.

புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் முள்ளி வாய்க்காலும்,கே.பி.யும்,கருணாவும் தெளிவுப்படுத்தி விட்டனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.

நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.

இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.

இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?

இதன் வழி நாம் சிந்திப்போமா?


ப.வி.ஸ்ரீரங்கன்.

Monday, November 21, 2011

நந்திக் கடற்கரையில் நவம்பர்: 27

"மாவீரர்கள்" : பணத்தைக் குவிப்பதற்கான பந்தையக் குதிரைகளாக...

நவம்பர்: 27,நெருங்க-நெருங்க,


ந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக அன்று வெளிபட்டது.இது, ஒரு வரலாற்றுத் தரிசனமாகவே உள்வாங்கப்படவேண்டும்.இத்தகையவொரு உளவியலைச் சமுதாய மனநிலையாக மாற்றிய இலங்கையின் இனவாதத்தத் தொடர்சியுள்ள உண்மைகளை வெறுமனவே இனவாதக் கருத்தாக ஒதுக்கிவிட முடியாது.
 
என்றபோதும், எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
 
ஒரு இயக்கத் தலைவனது சரணடைவுக்குப்பின்,அவனைக் கொலை செய்து மகிழ்ந்த அரசியல் இலங்கைக்குச் சொந்தமெனினும்,அதையே மறைத்து இன்னும் தமிழீழக் கனவு வீசும் கயமைமிகு புலம்பெயர் தமிழ் அரசியலானது ஆபத்தானது.


இஃது, ஒரு சமுதாயத்தையே சதிராடிச் சீரழித்தபின் மீளவும், பணம் பறிக்கும் வியாபார உத்தியோடு, அரசியல் செய்வதுதாம் எமக்குரிய பாரிய வெறுப்பாக அமைகிறது.கடந்த முப்பதாண்டுப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணோடு போக,எஞ்சியிருப்பவர்கள், தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில், கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் இனிவரும் நவம்பர் 27 கொலையையும்-சதியையும்,சரணாகதி அரசியலையும் புனிதப்படுத்தியபடி போர்க்கதை சொல்லப் போகிறது.
 
மக்களை ஒட்ட மொட்டையடித்து,அநாதைகளாக்குவதில் தொடரும் அரசியல் என்னவென்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும்!
 
இது,மற்றவர்களை ஏமாற்றிப்பிழைப்பதில் காலாகாலமாகப் பழக்கப்பட்டவொரு சமுதாயத்தின் அகவிருப்பாகவே இனங்கண்டாக வேண்டும்."ஊரை அடித்து உலையில் போடும்" ,யாழ்ப்பாணிய அரசியலுக்கு, அழிவு இன்னும் இல்லை என்பதை அழகாகக இனங்காணும் அரசியலை இப்போது பணப்புலி நெடியவன் குழுவுக்குள்ளும்,காடுகடந்த "தமிழீழ அரசின் " தலைமையில் இன்னொரு பிளவுக்குள் தவிக்கும் இலண்டன் தலைமைக்ககுள்ளும் காணமுடியும்.வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லுகிறது.

" குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியுள் அமிழ்ந்து கருவாடாகியபோது
கம்பி வேலிக்குள் அதன் எச்சம் அடக்கப்பட்டது
இத்தனைக்கும் மத்தியில் மீள உண்டியலோடு
உருப்படாத பணப்புலி..."

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்திலும்,எவரெவரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும், தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.
 
ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து , தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்தது.
 
அது, எமை அனைத்துக்கும் அடிமையாக்கிச் சென்றுள்ளது.
 
இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த முனையும் புலம் பெயர் எச்ச சொச்சங்கள் போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு "உரிமை"குறித்துப் பேசுகிறது.அதே பழைய பாணியில் கருத்தாடும் நபர்கள், கடந்த காலத்தில் அழியுண்டுபோன போராளிகளை மிக மலினப்படுத்திப் பூசிப்பதால் ,அவர்களது கொலைகளை தேசத்துக்கான தியாகமாக்கிவிட முடியாது.
 
நவம்பர் இருபத்தியேழுக்கான ஒத்திகைச் செய்துவரும் பாசிசப் பணப் புலிகள்,இதுவரையான எல்லாவிதப் போராட்ட முறைகளும் செய்து பார்த்த இவர்களது போராட்டத் தலைமையோ, இவர்களாலேயேதாம் காட்டிக்கொடுக்கப்பட்டு[இறுதியில் சரணடைந்து] செத்த ஈனத்தனத்தை,இவர்கள் தியாகமாக்குவதில் மேலுஞ் சில்லறைகளைக் கவ்வுவதற்கேற்ப அரசியல் பேசுவது தமிழ் மக்களது ஞபகசக்தியோடு விளையாடுவதே.மாவீரரை நினைவு கூரும் தகமை இந்தப் பணப் புலிப்பினாமிகளுக்கு உண்டா?

அந்தத் தகமையானது உண்மையான-நியாயமான அறங்களால் கட்டியமைக்கப்படுவது. மக்கள்சார்ந்த துளியளவு வெளிப்படையான அரசியலும் செய்ய முடியாத இந்த மாபியாக்கள்தாம் ,இனிவரும் கார்த்திகைத் தீபம் ஏந்தக் காத்துக்கிடக்கின்றனர்.தம்மால் பலியிடப்பட்ட அப்பாவிப் போராளிகளை வைத்து ,மீளவும் பணந் திரட்டம் இந்தக் கேடுகெட்ட புலிகளுக்கு வக்காலத்து வேண்டும் அறிவுகெட்ட தேசியப் பாலகர்களை எந்தப் பொழுதிலும் ஜீரணிக்கவே முடியவில்லை!தமது சொந்தத் தலைவனுக்கு என்ன நடந்ததென்றதையே மறைத்தொதுக்கும் களவாணிக்கூட்டம்,செத்த போராளிகளுக்த் தீபம் ஏற்றுவதற்கு இலாயக்கானவர்களா?

அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது ,தமக்கு எதிரான எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிக்கிறது!இதைப் புதிய புலிக்காவடிகளும்,அதை ஆட்டுவிப்பவர்களும் தொடர்தே வருகிறார்கள்.தத்தமது இடத்தைத் தக்கவைப்பதில் மிகவும் நிதானமாகவே இந்தக்கூட்டு இருக்கிறது.இதற்கான உறுதியான அத்திவாரமாக இந்தப் பலிகொடுக்கப்பட்ட பாலகர்களது முகங்களைக்காட்டி ,மீளமீளப் பணம்புரட்டும் வியாபாரக் கூட்டமாக மாறியுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளை அவர்களது குணவியல்புக்கமைய அவர்களே வெளிப்படையாகக் "குத்துவெட்டில் "இறங்கிக் காட்டிக்கொண்டாலும் ,செத்த போராளிகளது முகங்களைக் காணும் எந்த மனிததரும் இரங்கவே செய்வார்கள்.

இந்தப் பலவீனத்தைக் காசாக்குவதில் அதீத கவனஞ் செலுத்தும் பணப் புலிகள்,தம்மால் அநாதவராக விடப்பட்ட போராளிகளையோ அல்லது தம்மால் கட்டாயமாகப் பிடித்துக் கொலைக்கு அனுப்பப்பட்ட போராளிக் குழந்தைகளது பெற்றோருக்கோ இதுவரை எந்தக் காரியமும் செய்யவே இல்லை!எனினும்,கார்த்திகை இருபத்தியேழு என்பதில் காசு காணும் மனோபாவமானது,ஒரு இனத்தின் உரிமையையே வியாபாரமாக்கிய கையோடு ,செத்த போராளிகளது ஆன்மாவையே வைத்துக் கடைவிரிப்பதில் தமது "ஆன்மாவென்பது பணம் புரட்டும் ஸ்த்தானத்திலேயேதாம் புரட்டிப் போடப்பட்டதென" நிரூபிக்கின்றனர்!
 
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள்படும் தொடர் துன்பங்கள், பசி,பட்டுணி, சாவு, பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில் உருவாக்கி விட்டுள்ளது! இப்போது ,விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.
 
இன்றோ, புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும்... அது, குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!

புலம்பெயர்ந்த மண்ணிலோ,தமிழ்மக்களை ஒட்ட மொட்டையடித்து,அரசியல் அநாதைகளாக்குவதற்கென்றொரு கூட்டம்"நாடு கடந்த தமிழீழம்-நாடு கடந்த நாடாளுமன்றம்-நெடியவன்-கொடியவன் குழுவென "பணப் பிசாசுகளாக வலவந்து ,மக்களை ஏமாற்றிக்கொள்ள மீண்டும் செத்த போராளிகளது பெயரால் பணவேட்டைக்காகக் கார்த்திகைத் தீபம்,மாவீரர் முகந்தாங்கி உண்டியல் கிலுக்குமானால் ,தமிழ்பேசும் மக்கள் அடுத்த நூற்டில் ஆட்டு மந்தைகளாகவே அடுத்தவர் தயவில் வாழக் கற்றுக்கொள்வர்.இதைத் தடுத்து நிறுத்துவதற்கு நாம் முனைந்து,இவர்களது மோசடி வித்தைகளை அம்பலப்படுத்தியாகவேண்டும்.இது எந்தவடிவிலுஞ் செய்து முடிக்கவேண்டிய அவசியப்பணி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்,ஜேர்மனி
21.11.2011