Sunday, November 11, 2007

விடுதலைப் புலிகளால் போர் மூலம்...

மக்களை முட்டாளாக்கி வருகிறது
இந்தியச் சாணாக்கியம்!


வணக்கம்,வாசகர்களே!இது தமிழ்ச்செல்வன் படுகொலை குறித்துப் பேராசிரியர்.டாக்டர் சி.சிவசேகரம் அவர்கள் எழுதிய சிறு குறிப்பு.இதுள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய போராட்ட அணுகுமுறை குறித்த பார்வைகளை, இலங்கையிலிருந்தபடியே பேராசிரியர் பார்க்கின்றார்.இதைத்தான் நாமும் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றோம்.இருந்தும், புலிகளின் போராட்ட முறைகளிலோ அன்றி மக்களுக்கும் அவர்களுக்குமான உறவுகளிலோ,அணிச் சேர்க்கையிலோ-வெஜனப்படுத்தல்களிலோ,உட்கட்சி ஜனநாயகப் பண்பிலோ இதுவரை மாற்றமில்லை.எனினும்,தொடர்ந்தும் நாம் எழுதியே வருகிறோம்!இங்கே,புலிகளின் போராட்டத்தைத் தீர்மானிக்கும் பிராதான சக்திகள் எவை?



மக்களா?



வெளிபுறச் சக்திகளா?



இந்தக் கேள்விக்கு நாம் ஏலவே பதிலைத் தந்திருக்கிறோம்.மக்களின் எந்தப் பங்களிப்புமின்றித் தம்மால்(புலிகள்) செய்யப்படும் போராட்டத்தால் அதே மக்களைப் பாதிப்படைய வைத்தபடி, அவர்களைக் கேடயமாக்கும் இந்தப் போராட்ட முறையானது சாரம்சத்தில் மக்களின் உரிமைக்கு-விடுதலைக்கெதிரானதென்பதை நாம் மீளவும் அறுதியிட்டுச் சொல்லும் அரசியல் விஞ்ஞானம் உண்மையானதென்பதை பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துத்தான் நிறுவவேண்டுமென்பதல்ல.என்றபோதும,; பேராசிரியர் இலங்கை மண்ணில் இருந்தபடி இந்தப் போராட்டத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து வருபவர்.மக்களின் அழிவுக்குப் பின்பான பாரிய மானுட அவலத்துள் தமிழ் பேசும் மக்களின் சமூக சீவியம் தள்ளப்பட்டபின், மக்களின் ஆன்ம வலுக் குன்றியிருக்கிறது.வாழ்வின் எதிர்பாராத அழிவில் மானுடம் கூட்டுப்பலத்தையிழந்து தவிக்கிறது.மக்கள், போராட்டத்தோடு மானசீகமாகப் பிணையுறாதபோது இத்தகைய தடங்கல்கள் அவர்களையின்னும் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும்.அதை நாம் இப்போது நேரிடையாகக் காணினும் நமது போராட்ட முறையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்தபாடிலில்லை!


இது, எத்தகைய அரசியலை மக்கள் முன் வைத்திருக்கிறது?

மக்களே வரலாற்றைப்படைபவர்களென ஆயிரம் தடவை பட்டியல் போட்டுக் கூறும் புலிகளின் பிரசுரங்கள் அந்த மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியபடி இதைச் செய்யும் அரசியல்தான் என்ன?

மக்களின் விடுதலையை,அவர்களின் அடிமைத்தனத்தை-தமிழ்பேசும் ஒரே காரணத்தால் அவர்களை ஒடுக்கிவரும் சிங்களப்பாசிச ஒடுக்குமுறையைத்தன்னும், அவர்கள்மீது திணிக்காதிருக்கும் ஒரு காத்திரமான வெகுஜனப் போரை முன்னெடுக்க முடியாது புலிகள் வெறும் இராணுவவாதத்துக்குள் மூழ்கிக்கிடக்கக்காரணம் என்ன?-தமது அதி முக்கியமான தலைவர்களை இழக்கக் காரணமென்ன?அவர்களது மரணத்தில் அரசியல் செய்ய முனையும் பிற்காரணங்கள் என்ன?,மக்களை வெறும் இனவாதத் தீயில் மூழ்கடிக்க முனையும் வியூகம் என்ன?,சிங்கள அரசு செய்யும் அதே காரியத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் செய்து முடிக்கும் அரசியலிலிருந்து நாம் என்ன அரசியலை எதிர் கொள்கிறோம்?

இங்கேதான் உண்மையொன்றுண்டு!

அதாவது, புலிகள் எந்தப் பொழுதிலும் மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே ஆயுதம் ஏந்திப் போராட்ட அணியாகமாறியவர்கள் அல்லப் புலிகள்.புலிகள் அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய, மாறாக விடுதலையை அல்ல!இது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.

புலிகள் மக்களின் நலனைத் தமது எஜமானர்களுக்காக ஏலம்விட்டுப் போரைச் செய்து வருகிறார்கள்.இதிலிருந்து மக்கள் திசைமாறித் தமது விடுதலையைத் தாமே போராடித் தீர்மானித்துக்கொள்ள முடியாதவொரு சர்வதிகாரத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறைசார் ஜந்திரங்களால் மக்களின் அனைத்து வகை முன்னெடுப்பும் அடித்து நொருக்கப்பட்டுவருகிறது.இதனால் நாம் தொடர்ந்து அன்னிய சக்திகளாலும்,இலங்கைப் பாசிச சிங்கள அரசாலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, திட்டமிட்டு அழிக்கப் படுகிறோம்.இதற்குடந்தையாகப் புலிகளின் அத்துமீறிய யுத்த ஜந்திரம் மிகத் தோதாகச் செயற்பட்டு,மக்களின் உண்மையான எழிச்சியை முடக்கி வருகிறார்கள் என்பதைப் பேராசிரியர் சொல்லாமற் சொல்லுகிறார்.

இதிலிருந்து மக்கள் விடுபடக்கூடிய சூழலை எந்தவொரு சக்தியும் ஏற்படுத்திவிட முடியாதபடி புலிகளினதும் மற்றும் உதிரிக்குழுக்களினதும் ஆனந்தசங்கரிகளினதும்,டக்ளசுகளினதும் எஜமானர்கள் கவனமாக இருக்கிறார்கள்.இதற்காக இவர்கள் தமிழ் மக்களுக்குள் பற்பல குழுக்களைத் திட்டுமிட்டு வளர்த்துவருகிறார்கள்.புலிகளைப் பிரித்துக் கூறுபோட்ட அன்னிய சக்திகள் தத்தமது பலப் பரீட்சையை இலங்கையில் பரிசீலித்துக் கொண்டபோது, இந்தியா தனது கைகளிலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இலங்கையில் பற்பல பொறிகளை-வலையை விரித்து வைத்திருக்கிறது.அதன் தொடர்ச்சியாக இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ரீ.பீ.சீ. வானொலி, இராமராஜன்,மற்றும் புளட் ஜெகநாதன் போன்ற கிரிமினல்களைப் பயன்படுத்தியும் வருகிறது.இவர்களால் கொட்டப்படும் நச்சுக் கருத்துக்களும், புலிகளால் கொட்டுப்படும் தோட்டாக்களும் சாரம்சத்தில் ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால், புலிகளை இந்த இந்தியக் கைக்கூலிகள் எதிர்பதுபோன்று நடிக்க வைத்து, மக்களை முட்டாளாக்கி வருகிறது இந்தியச் சாணாக்கியம்.புலிகளுக்கெதிரான மக்களின் தார்மீகப் போராட்டமானது சுயவெழிச்சியோடு தமது போராட்டத்தைத் தாமே தீர்மானிக்கும் சூழலைத் தடுத்தபடி புலிகளுக்கெதிராகக் குரல் கொடுப்பதாக நடிக்கும் இந்தியாவின் கைக்கூலிகளிடம் மக்கள் மீளவும் வீழத் தகவமைக்கப்பட்ட பொறியில் மக்களைக் காவு கொள்ள இந்தியா முயல்கிறது.இந்தக் கைக் கூலிகளே,தமிழ்பேசும் மக்கள் இலங்கையின் ஓட்டுக் கட்சிகளோடு சமரசம் செய்து அதிகாரப் பகிர்வைப் பெறவேண்டுமென்று விவாதிக்க,அதையும் இராமராஜன் "ஆமா,ஆமா" என்றபடி ஆமோதிக்கும் "அரசியில்"கலந்துரையாடல்கள் வேறு மக்களிடம் கொட்டப்படுகிறது.இத்தகைய கபோதிகள் ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புலிகள்தான்.இவர்கள் புலிகளை எதிர்பதுபோன்று நடித்தபடி மக்களைக் காவு கொள்ளும் இந்தியாவின் இன்னொரு வடிவம்.

இதையெல்லாம் புரிந்துகொண்டு மக்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கக் கூடியவொரு சூழலை எங்ஙனம் இனம் காட்ட முடியும்?


பேராசிரியரின் கட்டுரையில் இத்தகைய கேள்வி தொக்கி நிக்கிறது.


படித்துப்பாருங்கள்.

கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.கருத்துக்கள் மக்களை வலுப்படுத்தும்.ஒருமைப்படுத்தும்-உண்மைகளை இனம் காட்டும்.

அப்போது, மக்கள் தமது எதிரிகள் தமக்குள் எந்தெந்த வடிவத்திலிருக்கிறார்கள் என்று புரியும்போது,தமது விடுதலையைச் சாத்தியப்படுத்தும் வழியைத் தாமே கண்டடைவார்கள்.இதுவே, நம் முன் உள்ள இன்றைய மிக முக்கியமான பணி.


அன்புடன்,
பரமுவேலன் கருணாநந்தன்
11.11.2007




மறுபக்கம் :

//அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளைப் போரால் அழிக்க
முடியாது என்ற கருத்தையிட்டு மகிழுகிறவர்கள் விடுதலைப் புலிகளால் போர் மூலம்
மட்டுமே அரசாங்கத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல இயலாது என்ற
உண்மையையும் உணரவேண்டும்.//



-பேராசிரியர்.டாக்டர்.சி.சிவசேகரம்.


தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ.என்.பி. பிரமுகர் எஸ்.பி.திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ.என்.பி.வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் எதிர்பார்த்த விதமாகவே மெச்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.




தம்மை எதிர்நோக்குங் கேள்விகளில் அடிப்படையானது இக் குண்டு வீச்சு அரசாங்கத்தின் தரப்பிற் கூறப்படுவதுபோல உளவுத் தகவல்களின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா என்பது. அப்படியென்றால் ஆயுதம் தாங்காத எதிரிகள் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலான இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்பது என்னுடைய நிலைப்பாடு. மாறாக வேறு சிலர் சொல்வது போல, இது வழமைபோல் மக்கள் குடியிருக்கும் இடங்களிலும் பொதுக் கட்டிடங்களிலும் பொழியப்படும் குண்டுமழை என்றாலும், இது அதேயளவு தவறானது. அப்பாவிப் பொது மக்களும் போரில் நேரடியாகப் பங்கு பற்றாதவர்களும் இவ்வாறு கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவது ஏற்க இயலாது.
லெபனானில் இஸ்ரேலியக் குண்டுவீச்சாகட்டும் சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சோமாலியாவில் நடத்திய குண்டுவீச்சாகட்டும், வியற்நாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது வியற்நாமிலும் லாவோஸிலும் காம்போஜத்திலும் நடந்த குண்டுவீச்சுகளாகட்டும் இன்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடக்கிறவையாகட்டும் எல்லாமே நிபந்தனையற்ற கண்டனத்திற்குரியன. குறுகிய காலத்தில் அவை பெற்றுத்தருகிற நன்மைகளால் மகிழ்ச்சி பெற்றவர்கள் நீண்ட காலத்தில் பெரும் இழப்புக்களையும் தோல்விகளையே கண்டுள்ளனர்.


மாக்ஸியவாதிகள் இவ்விடயத்தில் எப்போதுமே தெளிவாக இருந்துள்ளனர். போர்களும் ஆயுதப்போராட்டங்களும் தவிர்க்க இயலாதவை என்று அவர்கள் கூறி வந்தபோது அதை ஏற்க இயலாது. இந்திய மதங்களும் பண்பாடும் வன்முறையை ஏற்க மாட்டா என்றும்; பவுத்தம் அகிம்சையைப் போதிப்பதால் இலங்கையில் வன்முறைக்கு வாய்ப்பேயில்லை என்று சொல்லப்பட்டது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது இரண்டு நாடுகளிலும் சோதிக்கப்பட நீண்ட காலமாகவில்லை. அரச வன்முறை, மேலாதிக்க வாதிகளின் சாதிய வன்முறை, மதவாத வன்முறை என்பன இன்று நாளாந்த நிகழ்வாகிவிட்டன. அவற்றுக்கு எதிராக மக்கள் எழுச்சிகளும் தவிர்க்க இயலாமலே ஆயுத எழுச்சிகளாகிவிட்டன.


ஆயுதப் போராட்டம் என்பது குருட்டுத் தனமான வன்முறையல்ல. தனிமனிதப் படுகொலைகளால் விடுதலையை வென்றெடுக்க இயலாது. உயிரிழப்புகள் தவிர்க்க இயலாதன என்றாலும் தவிர்க்கக்கூடிய ஒவ்வொரு உயிரிழப்பும் தவிர்க்கப்படவேண்டும். இவை பற்றிய தெளிவும் உடன்பாடும் உள்ளவர்கள் தமது நிலைப்பாட்டில் தெளிவாகவும் தடுமாற்றத்திற்கு இடமில்லாமலும் நடந்துகொள்ளுகின்றனர். அரசியற் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் இவ்வாறான விடயங்களில் அறஞ்சார்ந்து கருத்துரைக்கின்றனர். உதாரணமாக கதிர்காமரின் கொலையை எவ்வளவு வன்மையாகக் கண்டிக்க முடிந்ததோ. அதேயளவு வன்மையுடன் ரவிராஜின் கொலையையும் கண்டிக்க முடிந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளரதுங் கொலையையுங் கண்டிக்க முடிந்தது. எந்தவொரு கொலையினதும் கண்டனமும் கொலை முயற்சி பற்றிய கண்டனமும் கொல்லப்பட்டவரது அரசியலையோ கொலை முயற்சிக்குட்பட்டவரின் அரசியலையோ பற்றிய கருத்தில் எவ்விதமான தளம்பலுக்கும் இடமளிக்கவில்லை.


நாடு பிரகடனம் செய்யப்படாத ஒரு போரினுள்ளும் நாளாந்தம் உக்கிரமடைந்துவரும் பொருளியல் நெருக்கடிக்குள்ளும் சிக்கித் தவிக்கின்ற ஒரு சூழலில் கிளிநொச்சிக் குண்டு வீச்சின் பின் விளைவுகள் நிம்மதிக்கு இடமளிப்பனவாகவே இருக்க முடியாது. எனவேதான், அது பற்றிய கண்டனம் அரசியல் கண்ணோட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. அது எவ்வகையான அரசியல் என்பது முக்கியமானது.


இப்போது விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவோரின் கொலைகளைக் கண்டித்தவர்களில் எத்தனை பேர் கிளிநொச்சிக் குண்டு வீச்சை கண்டிக்க ஆயத்தமாயுள்ளனர்.? கண்டிக்காததுபோகட்டும் ஏதோ ஒரு பெரிய சாதனை என்று பேசுகிறார்களே. இவர்களில் எவருக்கும் எந்தப் படுகொலையும் கண்டிக்க என்ன யோக்கியம் உண்டு என்று யோசித்துப் பார்ப்போம். இவர்களில் எவருமே `சரி, பிழை' என்பதை `நாங்கள்- அவர்கள்' என்ற அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். எனவேதான் இவர்களில் எவருக்கும் எளிய உண்மைகள் நினைவுக்கு வருவதில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட ஜே.வி.பி. தலைமைப்பீடம் முழுவதும் யூ.என்.பி. ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டது. இதை ஜே.வி.பி. தலைமை தவறு என்று கருதுகின்றது என்பதைவிட ஒரு கொடிய கொலை, பாதகம் என்று கருதுவதாகச் சொல்வது அரசாங்கத்தினது பார்வையிலும் பிற கட்சிகள் சிலவற்றினதும் கண்களில் தெரிவதுபோலவும் பொருந்தும். பயங்கரவாதிகளாகவே நடந்துகொண்ட அந்தத் தலைப்பீடத்தின் படுகொலை நியாயமானதா? ஜே.வி.பி.யும் அரசாங்கமும் மோதிய அந்த இரண்டு ஆண்டுகளில் நடக்காத பயங்கரமா? செய்யப்படாத கொடுமைகளா? ஜே.வி.பி.தான் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தியதுபோல யூ.என்.பி. ஆட்சியாளர்களும் தாங்கள் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தினார்கள். இன்றுங்கூடத் தாங்கள் செய்த குற்றங்களை ஏற்கத் துணிவில்லாத கட்சிகள் தாம் இவை.


தமிழ் மக்களிடையிலும் இவ்வாறான ஒரு போக்கை நாம் காணலாம். இன்றுவரை எந்தவொரு படுகொலையையும் எந்த அரசியற் கட்சியுங் கண்டிக்கிறது என்றால் அக்கொலை அவர்களுக்கு உடன்பாடற்றவர்கள் செய்ததாயிருக்கும் என்று நம்பக்கூடியவாறே அவர்கள் நடந்துவந்துள்ளனர்.
ஒரு அடக்கு முறை ஆட்சிக்கு அறம் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அது தவறுக்கு மேல் தவறுசெய்துகொண்டு போகிறதற்கு அதற்கு அறம் இல்லாமை ஒரு முக்கிய காரணம். ஆனால், விடுதலைப் போராட்டங்களிற்கு அறங்கள் உள்ளன. அவற்றைப் புறக்கணிக்கிறபோது அவற்றின் நியாயம் பலவீனமடைகிறது.


ஒரு விடுதலைப் போராட்டம் தனது மக்களைச் சார்ந்து நிற்கும் வரை அதை யாருமே முறியடிக்க இயலாது. தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் இவ் விடயத்தில் தொடக்கத்திலிருந்தே பல தவறுகளைச் செய்து வந்துள்ளது. தமிழ் மக்களிடையே இருந்த மேட்டுக் குடிகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு செயற்பட்ட தலைமையை மக்கள் நிராகரித்தபோது ஒரு வெகுசனப் போராட்டத்திற்கும் ஒரு வெகுசன அரசியலுக்குமான வாய்ப்பு ஏற்பட்டது. அது நடக்காத விதமாகத் தடுத்தது என்ன? இயக்கங்களின் அரசியல் சிந்தனை பழைய தலைமையின் தவறான சிந்தனைகள் பலவற்றை களையத் தவறியமையா? இயக்கத் தலைவர்களின் முதிர்ச்சியின்மையால் அவற்றினிடையே இருந்துவந்த போட்டி பொறாமைகளா? இயக்கங்களின் தலைமைகளின் பலவீனங்களை நன்கு அறிந்து அவற்றினிடையே போட்டியையும் பகைமையையும் ஊக்குவித்து தனது எடுபிடிகளாக அவற்றை மாற்றுகிற நோக்கிற் செயற்பட்ட ஒரு பிராந்திய வல்லரசினது சதி வேலைகளா? இவை எல்லாமே பங்களித்திருந்தாலும் மக்களே பிரதானமான வரலாற்றுச் சக்தி என்பதை இயக்கங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஏற்க மறுத்தமையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனமாகும். அண்மைய இழப்புக்களின் காரணங்களைத் துரோகங்கள் பற்றிப் பேசலாம். துரோகிகள் என்று கருதப்பட்டவர்களை அழிக்கலாம். துரோகங்கள் நிற்கப்போவதில்லை. அவை பெருகுமே ஒழியக் குறையா. போராளிகட்கும் துரோகிகட்கும் ஊட்டம் மக்கள் மத்தியிலிருந்தே கிடைக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டம் ஏகப் பெரும்பான்மையான மக்களைத் தன்பக்கம் திருப்புவதன் மூலம் துரோகிகளைத் தனிமைப்படுத்துகிறது. துரோகம் செய்த பலர் மனந்திருந்த வாய்ப்பேற்படுகிறது. புதிய துரோகிகள் உருவாகிறதற்கான வாய்ப்புக்களை இல்லாமற் செய்கிறது.


துரோகம் எது? துரோகிகள் யாரென்ற முடிவை மக்களே எடுக்க வேண்டும். யாரை எவ்வாறு தண்டிப்பதென்கிற முடிவு மக்களிடம்விடப்பட வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான தாக்குதலில் அதிகளவிற் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி மக்களே. எத்தனையோ அப்பாவிகளைக் கொன்று குவித்து அதைவிடப் பெருந்தொகையானோரை வாழ வழியற்றோராக்கியுள்ள அரசாங்கம் ஒரு அரசியற் படுகொலையை வெற்றி என்று கொண்டாடுகிறது. இதன் மூலம் இதற்கு முன் விமானங்கள் இலக்கு வைத்துத் தாக்கியவை எல்லாம் போராளிகளின் வதிவிடங்களல்ல. மாறாக பொதுமக்களின் வாழ்விடங்களே என்ற உண்ைம வெளிவராமல் தடுக்கப்படுகிறது.


அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளைப் போரால் அழிக்க முடியாது என்ற கருத்தையிட்டு மகிழுகிறவர்கள் விடுதலைப் புலிகளால் போர் மூலம் மட்டுமே அரசாங்கத்தைத் தோற்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்ல இயலாது என்ற உண்மையையும் உணரவேண்டும். அது விடுதலைப் புலிகளின் ஆயுத வலிமையோ போர்த்திறனோ பற்றிய அடிப்படையிலன்றிக் பிற உள்நாட்டு, வெளியுலக நிலவரங்களினதும் அடிப்படையும் நாம் வந்தடையக் கூடிய முடிவு.


போர் மட்டுமே போராட்டமல்ல என்பது பற்றியும் பொதுமக்களைப் போராட்டத்தின் பிரதான பகுதியாக்குவதன் தேவை பற்றியும் உலக வரலாறு நிறையவே கூறுகிறது. நாம் கற்பது எப்போது?


-பேராசிரியர்.டாக்டர்.சி.சிவசேகரம்


நன்றி:தினக்குரல்

2 comments:

oru Elath thamilan said...

யாரோ எங்கேயோ ஏதோவொரு நாட்டில் போராடி எழுதிய நூல்கள் பலவற்றை படித்துவிட்டு போராளிகளூக்கு ஆலோசனை கூறுவது மிகப் பெரிய தமாஷ்.
பேராசிரியர் சி.சிவசேகரம் பொறியியற்துறையைச் சேர்ந்தவர். போர் குறித்த நடைமுறை அனுபவம் எதும் அற்றவர். போராட வேண்டாம் ஒருயொரு நாள் போர்முனையில் நின்று பாருங்கள் உங்கள் புத்தக அறிவு எத்தனை ஏட்டுச் சுரக்காய் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். புலிகள் போராடுவதை மட்டும் பார்த்து புத்திசொல்ல முனைய வேண்டாம். உங்கள் மொழியில் கூறவேண்டுமானால் மெத்தப் படித்தவர்கள் புலிகள் அமைப்பில் நிறையப்பேர் இருக்கின்றார்கள். சீனாவில் போராடியது போல் போராடினால்தான் போராட்டம் என்று நம்புவது தவறு.

ஒரு கேள்வி: விபரம் தெரிந்த நீங்கள் ஏன் புலிகளின் போராட்டத்தில் நேரடியாக இணைந்து வழிகாட்டக்கூடாது?

ஒரு ஈழத்தமிழன்

P.V.Sri Rangan said...

//ஒரு கேள்வி: விபரம் தெரிந்த நீங்கள் ஏன் புலிகளின் போராட்டத்தில் நேரடியாக இணைந்து வழிகாட்டக்கூடாது?//


//யாரோ எங்கேயோ ஏதோவொரு நாட்டில் போராடி எழுதிய நூல்கள் பலவற்றை படித்துவிட்டு போராளிகளூக்கு ஆலோசனை கூறுவது மிகப் பெரிய தமாஷ்.//

ஒரு தமிழரே,நமது கட்டுரையை மீளவும் ஒருக்கால் படித்துப் பார்க்கவும்.அதன் பிறகவாது இப்படிக் கூறுவதற்கானவொரு"அறிவு"உங்களிடம் தோன்றுதாவென்று பார்ப்போம்!:-(