Tuesday, October 23, 2007

மு.மயூரனின் கேள்வியை முன்வைத்துச் சில கருத்துக்கள்.

மு.மயூரனின் கேள்வியை முன்வைத்துச் சில கருத்துக்கள்.


"மக்கள் போராட்டம் என்றால் என்ன?"


//மக்கள் போராட்டம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று நீங்கள் யாராவது விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும். வெறுமனே அந்த சொல் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆழம் யாருக்கும் புரிவதாயில்லை.//


இன்று, நிலவுகின்ற அமைப்பினால் மக்கள் இனங்களில் அதிகமான பகுதி மக்கள் உயிர்வாழ்வதற்காக ஓடாய் உழைத்து வாழவேண்டியிருக்கிறது.அப்படி உழைத்தாலும் சம்பாத்தியம் உயிர் வாழ்வுக்கான அதிமுக்கியமான மனிதாயத் தேவைகளைப்(உணவு,உடை,உறையுள்,மருத்துவம்,கல்வி,ஆன்மீக வளர்ச்சி)பூர்த்தி செய்வதற்கே முடியாத திண்டாட்டமாக இருக்கிறது.எனினும், "எனக்குக் கூலியைக் கொஞ்சம் கூட்டித் தாருங்கள"; என்று கேட்பது,நிலவுகின்ற விலைவாசிகளினதும்-பணவீக்கத்தினதும் விளைவுகள்தான் என்பதால் அது நியாயமாக இருக்கிறது.இது,இந்த அமைப்பில் வாழும் ஒருவருக்கு ஏற்படும் வாழ்வியல் யதார்த்தம்.ஒரு போராட்டம்-உழைப்பவர்கள் உழைப்பை வழங்கித் தமது உழைப்புக் கேற்ற ஊதியத்தைக் கோரும் உண்மையான முரண்பாடு இது.


இதைச் சுலபமாக விளங்கவே இப்படிச் சொல்லப்பட்டது.

இந்த முரண்பாடானது அந்தவுழைப்பையும்,அதனால் ஏற்படும் உபரி மதிப்பீட்டையும் சமுதாயத்தில் திருடுகிறவர்களை உடமையாளர்களாக்கியுள்ளது.


எனவே,மனித சமூகத்தில் உழைப்பவரும்,உழைப்பை அபகரிப்பவரும் என்ற இரண்டு வர்க்கம் தோன்றுகிறது.இது முதலாளியத்தில் தவிர்க்க முடியாத வர்க்க நிலை.எனவே மனிதர்கள் இப்போது வர்க்கமாகப் பிளவுண்டு போகிறார்கள்.இங்கே பற்பல முரண்பாடுகள் இனித் தோன்றும்.முதலாளியாக மாறியவருக்கும்,தொழிலாளிகளாக இருப்பவர்களுக்கும் சதா முரண்பாடுகள் முளைவிடும்.ஏனெனில், முதலாளிகள் தொழிலாளரின் உழைப்பைத் திருடுவதானால் மட்டுமே செல்வத்தைச் சேகரிக்க முடிகிறது. இயற்கையிலுள்ள கனிவளங்களைத் தொழிற்சாலைவரை எடுத்துவந்து,பின்பு அதைப் பொருளாக்குவதும் உழைப்புத்தான்-அது தொழிலாளியால்தான் முடிகிறது.


இங்கே, இரண்டு தளத்தில் முதலாளிகள் வருமானத்தைப் பெறுகிறார்கள்.ஒன்று அனைவருக்கும் பொதுவான புவிப்பரப்பிலுள்ள கனிவளம்,மற்றது அதை அகழ்ந்து பொருளாக்கும் மனித உழைப்பு.இது, முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை என்ற அமைப்பாண்மையால் சமுதாயத்தில் நியாயப்பட்ட அமைப்பாக இருக்கிறது.இந்த அனியாயமான திருட்டைப் பாதுகாக்க வன்முறைசார் கருத்துக்களும்,வன்முறைசாரக் கருத்துக்களாலும் அரச அமைப்பு ஒன்று தோன்றி,உழைப்பவரை அடக்குகிறது.அல்லது கூலி உயர்வு கேட்கும் அப்பாவிகளைச் சட்டம்,பொலிஸ் என்று ஏவி ஒடுக்கி வருகிறது.இங்கே உழைப்பவர்கள் ஒரு குடையுள் இணையப் பார்க்கிறார்கள்.தமது நியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.



ஆனால்,உடமையுடையவர்கள் தொழிலாளிகளைப் பிளப்பதற்காக அவர்களுக்குப் பிரிவினைகள் இருக்கக் கூடிய உடல்-உள மற்றும் பிறப்பால் வந்த தோற்றங்களை வைத்து அவர்களைப் பிரித்தெடுகிறார்கள்.இது சாதி,மத,இன அடையாளமாகவும்,மொழி வழிச் சமுதாயங்களாகவும் பரிவுகளை ஊட்டி வளர்த்து உழைப்பவர்களை,ஒருவருக்குள் ஒருவரை மோதவிட்டுத் தமது உடமையையும்,செல்வத்தையும் தொடர்ந்து காப்பாற்றும் போது,அவை ஒரு கட்டத்தில் இனவொடுக்குமுறை,சாதியொடுக்குமுறை,மதப் போர் என்று தொடர் அடிமைப்படுத்தல்கள் நிகழ்கிறது.


இங்கே,உடமையாளர்கள் தம்மைப் பலப்படுத்தும் ஆயிரம் கருத்துக்களால்,கல்வியால் உழைப்பவரை ஒடுக்கி விடுகிறார்கள்.இப்போது மக்கள்"இதுவரை வாழ்ந்ததுபோல் இனி மேற்கொண்டு வாழ முடியாது"என்ற முடிவிற்குக் கோடிக்கணக்காக வரும்போது புரட்சிகள்(மக்கள் போராட்டம்)வருகிறது.இங்கே உண்மையில் நிகழ்வது என்னவென்றால்,இந்தப் புரட்சியின் அவசியம் சமுதாய வளர்ச்சியின்(மனிதர்கள் உயிர்வாழ உணவு தேடியபோது "வேடர்களாக"பின்பு தானியங்களைச் சேகரித்து வைத்து வாழும்போது நிலத்தை உடமையாக்கி நிலப்பிரபுக்களாக"ஆண்டான் அடிமைச் சமூகமாக,இது உற்பத்திச் சக்திகளின் தேவை-கண்டுபிடிப்போடு முதலாளியமாக...) புறவய விதிகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே.
எனவே,புரட்சிகள்(மக்கள் போராட்டம்)கட்டளைப்படி நடக்க முடியாது என்றாகிறது.ஒரு குறிப்பிட்ட தரணத்தையொட்டி மக்கள் போராட்டம் நடப்பதற்கில்லை.ஆக,அவை(மக்கள் போராட்டம்)வரலாற்று வளர்சிப் போக்கின் இயக்கத்தோடு முதர்ச்சியடைகிறது.பல்வேறு உள்நாட்டு,வெளிநாட்டு அரசியல்-பொருளியல் காரணங்களைப் பொறுத்துப் புரட்சிகள்(மக்கள் போராட்டம்)உரிய நேரத்தில் வெடித்துக் கிளம்புகிறது.

வரலாற்று வளர்ச்சிப் போக்கில் குறிப்பிட்டவொரு கட்டத்திலுள்ள சமுதாயம்,தனக்கே உரித்தான தனியொருகுணமுடைய சமுதாயமாக நிலவுகிறது.இங்கே,வரலாற்றுக் கட்டத்தில் பல கட்ட பொருளாதாரப் புற நிலை நிகழ்வுகள் இருந்துள்ளன.இவைகள் தத்தமது குணவியல்புக்கு ஏற்ற சமுதாயத்தைக் கொண்டிருந்தது.ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு கூட்டுச் சமூகமாக வாழ்ந்தார்கள், இதைப் புரதான கூட்டுச் சமுதாயம் என்றும் பின்பு இதுவே மாற்றப்பட்டுஅடிமை உடமைச் சமுதாயமாக மாறுகிறது.இங்கே, உழைப்பவர்களை அடிமையாக்கி வருத்தி அவர்களைப் பிழிந்தெடுத்தார்கள்.இதையும் மனிதர்களில் சிலர் பெரும் நிலத்தைப் பயிரிடும் பயன்பாட்டுக்குள் கொணர்ந்தபோது, நிலப்பிரபுத்துவம் தொடங்கி விடுகிறது.இதுவும் கூலிவிவாசாயிகளாக மாற்றப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்திச் சுரண்டுகிறது.இது கொத்தடிமைகளாக்கிச் சமுதாயத்தக் கேடாக்கியபோது,சாட்சாத் முதலாளியம் தோற்றங்கண்டு மனிதருக்கு மகத்துவம் என்று அறைகூவித் தனிப்பட்டவரின் சுதந்திரத்தை வலியுறுத்தி அன்றைய பொழுதில் மிகப் பெரும் புரட்சியைச் செய்துகாட்டியது.இங்கே ஒவ்வொரு அமைப்புக்கும் ஒன்று முற்போக்காக வருகிறது.பின்பு, அதுவே உழைப்பவர்களை அடிமைப் படுத்துகிறது.

இது எதனால்?

மனிதரில் சிலருக்கு சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகும் பொருளாதார விஞ்ஞானம் தெரிகிறது.அங்கே,முடிவு தெரிகிறது!

அதாவது, சந்தைப் பொருளாதாரமாக இருக்கும் தனியுடமை முறையானது சமுகத்தில் பொதுவாக இருக்கும் இயற்கையையும் அதன் பயன்பாட்டிற்காய் உழைப்பாளியால் உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள்(ஜந்திர வகைகள்) தனியுடைமையாக இருப்பதே மனித சமூகத்தில் போட்டி,போர்கள் மலிகிறதாக இனம் காணப்பட்டபோது,இதை மாற்றிச் சமுதாயத்தில் உற்பத்தி ஆதாரங்களைப் பொதுவாக வைத்து அதன் வடிவில் உற்பத்தி உறவுகள் நிலைக்கும்போது மக்கள் சமாதானமாகவும்,உயிர்வாழும் அர்த்தத்துடனும் வாழ முடியுமென்று காணப்பட்டது.

இங்கேதான், தனியுடமைவாதிகள் தமது வர்க்கச் சிதைவையும்,தாமும் உழைத்துண்ண வேண்டிய நிலையையும் மறத்து அதற்கெதிராகப் போரிடுகிறார்கள்.இந்தப் போர் என்ன வடிவில் வந்தாலும் வரலாறு பூராகவும் வர்க்கங்களுக்கிடையிலான போராகவே வருகிறது-தொடர்கிறது.

இங்கே, நமது ஈழப்போராட்டதை உதாரணமாக எடுத்தால், அது என்ன நிலையில் தோன்றுகிறது-என்ன நிலையை அடைகிறது,எவரது நலன்களைக் காக்க முனைகிறதென்பதை ஆராய்ந்தால், மக்கள் போராட்டத்தின் தன்மை புரியும்.அங்கே, எவர் எந்தத் தளத்திலிருந்து போராட வேண்டுமென்று தீர்மானிப்பது வர்க்க உணர்வே.ஒருவர் கொண்டிருக்கும் வர்க்கத்தளமே அவரைத் தனது வர்க்கத்துக்காகப் போராட அனுமதிக்கிறது.இதை மறுத்து ஆளும் வர்க்கம் மொழிசார்ந்தும்,மதம்சார்ந்தும் உழைப்பவரைத் தனக்குள் இணைத்துத் தனக்குள் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்க்க முனைகிறது.உதாரணமாகப் பல்லினங்கள் வாழும் இலங்கைக்குள் இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி,அதிகாரப் பகிர்வு,பங்கீடு,சந்தைப் பகிர்வு,உற்பத்தி வலு-ஊக்கம் என்பதுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண்பதற்காக இனங்களுக்குள் இருக்கும் உடமை வர்க்கம் இனவாதத்தைக் கையிலெடுத்து மக்களை-உழைப்பவர்களை மொழிகளுக்கூடாகக் கோடுகிழித்துக் கூறுபோட்டுச் சண்டையிடுகிறது.இங்கே,தேசியயினங்களாக இருக்கும் ஒவ்வொரு இனமும் தத்தமது இன அடையாளங்களுக்கூடாகப் பிளவுபட்டுப் போரிடுவது இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்க(உற்பத்திச் சக்திகளை உடமையாக வைத்திருப்பவர்)நலன்களுக்கானதே.



உதாரணமாகத் தமிழீழம் ஒன்று உருவாகினாலும்(நேற்றைய அநுராதபுரத் தாக்குதல்போல் ஓராயிரம் தாக்குதல் நிகழ்வதற்கும் அப்பாவி மக்களின் குழந்தைகளே முயல வேண்டும்.அப்படி முனைந்தாலும் தமிழீழம் மலர வாய்ப்பு இல்லை என்பது வேறு விஷயம்) உழைக்கும் தமிழர்களுக்கும்,உடமைத் தமிழர்களுக்குமான வர்க்கப்போர் தொடரும்.


அப்போது இன்றைய தேசியவிடுதலைப் போராளிகள் நாளை நமக்குள் இருக்கும் பெருந்தொகையான கூலிகளை-உழைப்பவர்களை ஒடுக்குவார்கள்.நல்ல உதாரணம்: வடமாகாணத்தில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டம்-அதைப் புலிகள் எங்ஙனம் எதிர் கொண்டார்கள்?தமிழகத்தை இன்னொரு உதாரணத்துக்கு எடுத்தால்,தமிழகம் அண்ணளவாகத் தமிழர்களாலேயேதான் ஆளப்படுகிறது.எனினும், தமிழகத்துப் போலிசுகள் உழைக்கும் மக்களை-தமிழர்களை ஏன் ஒடுக்கிறது?தமிழக அரசு அனைத்துத் தமிழர்களுக்கும் நீதியானவொரு அரசாக இருக்கிறதா?-அங்கே உழைப்பவர்களுக்கும்,உடமை வர்க்கத்துகஇகுமான உறவு எப்படியுள்ளது?



இதே கதைத்தான் ஈழத்துக்கும்.



ஆகையினால்,இன்றே வர்க்கப் போரைச் செய்யும் உழைக்கும் மக்களுக்கான புரட்சிகர அதிகாரத்தையும்,அரசையும் நிறுவும் மக்கள் போராட்டப் பார்வை அவசியமாகிறது.இங்கே மக்கள் போராட்டம் என்பது இனம்,மொழி,மதம் தாண்டிய உழைப்பால் ஒன்றுபடும் மக்களின் போராட்டமாகும்.இது,இன்றைய இலங்கைக்குள் இன்னும் பலமுனை-வகை உப முரண்பாடுகளோடு இருப்பதால் குறைந்தபட்சமாவது தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமக்கானவொரு அதிகாரத்துக்கான புரட்சியைத் தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கத்துக்கெதிராக அணிதிரண்டு முன்னெடுக்கும்போது,இதன் உள்ளடக்கமே தவிர்க்க முடியாது இலங்கையிலுள்ள அனைத்து இன உழைப்பாளிகளோடும் நமது உறவைப் பலப்படுத்தி இலங்கையில் புரட்சியைச் சாதிக்கும்.


அந்த வலு இலங்கைப்பாட்டாளிய வர்க்கத்துக்குண்டு.இதைக் கண்ணுற்ற வெளிப்புறச் சக்திகள் நம்மை இனங்களாகப் பிளவுப்படுத்திக் குறுந்தேசிய வெறிக்குள் அமுக்கி,நமது போராட்டத்தைத் திசை திருப்புகிறார்கள்.


எனவே,நமது போராட்டப்பாதையில் பற்பல தோல்விகள் சில வெற்றிகளின் பின்னே மறைந்திருக்கிறது.இது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் உடமை-ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகளை ஓரளவு தீர்க்க முனையும் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு கொள்ளும் உறவில் தனது போராட்டத்தை மட்டுப்படுத்தித் தவிர்க்க முடியாதாவொரு "தீர்வுக்கு"வரும்.அப்போது தமிழ் ஆளும் வர்க்கம் எதைச் சொல்கிறதோ, அதுவே முழு மொத்தத் தமிழரினதும் தீர்வாக இருக்கும்.அப்போது,மீளவும் தமிழ் பேசும் உழைப்பாளர்கள் தமது எஜமானர்களை சிங்களம் பேசாது தமது தாய்மொழியே பேசும் புற நிலையில் கண்டடைவார்கள்.



இது தேவையா?



இது குறித்துப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவான கட்டுரை எழுதுகிறோம்.



பரமுவேலன் கருணாநந்தன்
23.10.2007

Sunday, October 21, 2007

தமிழ் மக்கள்:மறுபக்கம்

அன்பு வாசகர்களே,வணக்கம்!

மீண்டுமொரு"மறுபக்கம்"பதிவோடு வருகிறோம்.இப்பதிவைத்தொடர்ந்தெழுதி வருபவர் ஒரு பேராசிரியர்.அவர் ஈழத் தமிழ்ச் சமூகத்துள் மிக முக்கியமான கல்வியாளர்.ஈழப்போராட்டமும்,இயக்கங்களும் கொலை செய்த கல்வியாளர்களெல்லாம் இப்போது மண்ணுக்குள் மண்ணாக.எஞ்சியிருக்கும் ஒரு சில ஈழத்துக் கல்வியாளர்களில் மிக முக்கியமானவர் பேராசிரியர்.டாக்டர்.திரு.சி.சிவசேகரம் ஆவார்.இவர் தன் சிந்தனையின் போக்கால் இடதுசாரி அறிஞராகவும் இனம் காணப்பட்டவர்.எனினும்,அவர் சிறந்த மனித நேயவாதியாகவும்,கல்வியாளராகவும், இன்றும் நம் போராட்டம் குறித்து ஆழமாகச் சிந்தித்து வருபவர்.தனது எண்ணங்களுக்கும்,மக்கள்சார்ந்த அரசியல் நோக்குக்கும் மிக இசைவாகவும்-அண்மையிலும் இருக்கிறார்.

இன்று படித்துப் பட்டம் பெற்றுவிட்டுப் பேராடும் பல்கலைக் கழகங்களுக்குள் இருக்கும் படிப்பாளிகள், மக்கள் நலன்சார்ந்து சிந்திக்காது,இயக்கவாத மாயைக்குள் இருந்தபடி ஏதேதோ அவிழ்க்கும்போது,பேராசிரியர் சிவசேகரமோ மக்களின் நலனிலிருந்து இயக்கத்தை,அதன் அரசியலை மற்றும் கட்சிகளை விமர்சிக்கிறார்.இது மிக ஆரோக்கியமான பார்வை.எமது மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளை தோழர் இரயாகரனுக்கு அடுத்ததாகப் பேராசிரியர் சி.சிவசேகரமே முன் வைப்பவர்.இன்றுவரை தோழர் இரயாகரன் முன்வைத்த கருத்துக்களின் நியாயத் தன்மையைப் பேராசிரியரின் எழுத்துக்குள் அவதானிக்க முடியும்.

தேசிய விடுதலை,சுயநிர்ணயம் என்றெல்லாம் சொன்ன இயக்கங்கள், எப்படி மக்களை அடிமை கொண்டன-எங்ஙனம் மக்களை அழித்து அவர்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்தன என்பதைத் தோழர் இரயாகரன் மிக நேர்த்தியாகவும்,விஞ்ஞானபூர்வமாகவும் தனது தளத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கூடாக முன்வைத்திருக்கிறார்.அவரது கருத்துக்கு-முடிவுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படையே காரணமாக இருப்பதனால் அது உண்மையாக இருக்கிறது.அவ்வண்ணமே,இப்போது பேராசிரியர் சிவசேகரத்தின் கருத்துக்கும் அரசியல்-பொருளியில் விஞ்ஞானமே அடிப்படை.இக்கருத்துக்களின்படி நமது "தேசியவிடுதலை"ப் போராட்டத்தை முன்னெடுக்கும் புலிகளின் அரசியல் மற்றும் போராட்டச் செல் நெறியில் தவறிருப்பதையும்,அது தமிழ் பேசும் மக்களின் உண்மையான நலன்களோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லையென்பதையும் பேராசிரியரின் இந்தச் சிறு கட்டுரையூடாக நாம் ஆழ்ந்துணர முடியும்.

வழமைபோலவே,இதையும் புலிகளின் விசுவாசிகள் நிராகரித்தபடி,தனிப் பெரும்"தலைவர் திரு.பிரபாகரனால் உலகை வெட்டி ஆளமுடியும்,தமிழருக்கு வழிகாட்ட முடியுமென"க் கூவும் ஒரு நிலை உருவாகலாம்.எனினும், நமது அரசியல் வங்குறோத்தானது இன்று நம்மை நடுத்தெருவுக்கு அழைத்து வந்து, பிச்சையெடுக்க விட்டிருப்பதை நாமெல்லோரும் உணர்வு பூர்வமாக உணர்வதால் புலி இயக்கவாத மாயை தகர்ந்து வருகிறது.இது நல்லதொரு சகுனம்,மக்களின் நோக்கிலிருந்து சிந்திப்பதற்கு.


இத்தகைய நோக்கிலிருந்து சிந்திக்கும்போதுமட்டும்தான் புதிய கோணத்திலான புரிதற்பாடுகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.இந்த ஆரம்பமே நமது விலங்கை நாமே போராடி உடைக்கும் புதிய புரட்சிகரமான பாதையை இனம் காட்டும்.இந்த, இனம் காணும் தரணங்களே எமது உரிமையின் உண்மை நிலையையும்,எது எமது உரிமை,எது சுய நிர்ணயம் என்பதையும் ஓங்கியடித்து எமது முகத்தினதும்,விழிகளினதும் முன் காட்சிப்படுத்தும்.இது மிக அவசியமானது- எமது சமுதாயத்துக்கு.நாம் புலிகளின் பொய்யுரைப்பால் எமது இளைய தலைமுறையையே கையாலாகச் சந்ததியாக மாற்றியபடி, தனிநபர் துதிபாடும் கூட்டமாக மாற்றி வருகிறோம்.இதிலிருந்து மீளவும்,நமது இலக்கை விஞ்ஞான பூர்வமாக விளங்கிப் போராட்டத்தை வர்க்கம் சார்ந்து முன்னெடுக்கவும் நாம் இன்னும் மிக நீண்டதூரம் சென்றாக வேண்டும்.எனினும், இக்கட்டுரையூடாகச் சில பொய்மைகள் அம்பலமாகின்றன.இதை வாசகர்கள் மிக இலகுவாக இனம் காணமுடியும்!

வழமைபோலவே,புலி இயக்கவாத மாயைக்குள் இருக்கும் அன்பர்கள் பேராசிரியர் சிவசேகரத்தின் கட்டுரையையும் "கோணங்கித்தனமானது,தமிழர் விடுதலைக்கு எதிரானது,எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு எல்லாம் அத்துபடி-அவர் எமக்கு விடுதலை பெற்றுத் தருவார்"என்று விவாதிக்க முனையலாம்.எனினும்,இவை விஞ்ஞானத்தின் அடிப்படையை மறுப்பவை என்பதை நாமும்,வாசகர்களாகிய நீங்களும் அறிவோம்-அறிவீர்கள்.


இந்நோக்கில், பேராசிரியர்.டாக்டர்.திரு.சிவசேகரத்தின் இக்கட்டுரையை மீள் பிரசுரிக்கிறோம்.இது இலங்கையின் முன்னணி நாளிதழான தினக்குரலிலிருந்து நன்றியோடு பிரசுரமாகிறது.

வாசியுங்கள்,சிந்தியுங்கள்-எதிர்க்கருத்தாடுங்கள்!,இவற்றால் ஆவது புதிய பாதைகள்.புதிய பாதைமட்டுமே தமிழர்களுக்கான அரசியற்பாதை என்பதை நாம் அன்றும்,இன்றும் கூறுவது உண்மையென்பது விஞ்ஞான அடிப்படை.


அன்புடன்,
கருணாநந்தன் பரமுவேலன்.
21.10.2007





மறுபக்கம்


தமிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தேசியவாதத்தைவிடப் பிரதேசவாதத்தையே முன்னிறுத்துகிற போக்குக்களுக்கு முகங்கொடுக்க முயலாத நிலையில் தேசியவாதம் தடுமாறுகிறது. எத்தனையோ இயக்கங்கள் உருவாக்கப்பட்டு உள்மோதல்களாலும் இயக்கங்களிடையிலான மோதல்களாலும் தமிழ்ச் சமூகம் வீணான உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. அன்று தமிழ் இடதுசாரிகளை மட்டுமன்றித் தமிழ் ஈழக் கோரிக்கைகளை நிபந்தனையின்றி ஏற்க மறுத்த எல்லாரையுமே துரோகிகள் என்று பட்டஞ் சூட்டிப் பழித்த தமிழ்த் தேசியவாத இளைஞர் குழுக்கள் இப்போது எங்கே போய் நிற்கின்றன? யாருடைய நிழலை நாடுகின்றன? யாருக்காகப் பணியாற்றுகின்றன?


எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டுள்ளனவா? தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? இன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? அதை எவ்வாறு மாற்றுவது?
பதினெட்டாண்டுகட்கு முன்பு யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி ஒன்று, காணாமற் போன பிள்ளைகள் பற்றி எழுச்சியுடன் ஊர்வலம் போய் உரிமைக் குரல் எழுப்பியதை மனதில் இருத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் மூலம் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கேட்டுத் தாய்மார் ஒரு தமிழ் அரசியல்வாதியின் காலில் விழுந்து கேட்டுக் கொள்ளும் காட்சியை அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்களின் விடுதலை உணர்வு எங்கே வந்து நிற்கிறது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே மீட்பர்களின் அரசியல் தான் இருந்து வருகிறது. அதற்கு முதல் மேட்டுக்குடி மேய்ப்பர்களின் அரசியல் இருந்து வந்தது. சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் பேசி வென்று தருகிற தலைவர்களை நம்பி இருந்த சமூகம் பிறகு சத்தியாக்கிரகம் செய்து சமஷ்டி பெற்றுத்தர முடியும் என்கிற அரசியல் தலைமையை நம்பியது. தமிழ் பேசும் மக்கள் பற்றி நிறையவே பேசப்பட்டது. ஆனாலும், தமிழரைத் தமிழர் சாதியின் பேராலும் வம்சாவளியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிக்கிறது பற்றிக் கண்டுங் காணாமலே தமிழ்த் தேசியத் தலைமைகள் செயற்பட்டன.


முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர். வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டியோ அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள் தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர்.
1976 ஆம் ஆண்டு தமிழீழத்தை வென்று தர உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று ஒரு பகிரங்க விவாதத்தின் போது கம்யூனிஸ்ற்றான சண்முகதாசன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்தை நடுவர் ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையிற் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில் "அது எங்கள் இரகசியம்" என்பது தான். அந்த இரகசியமும் சிதம்பர இரகசியம் மாதிரி இல்லாத ஒரு இரகசியமே தான். தருமலிங்கத்தின் பதில் தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர். ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர்.


தமிழ் மக்கள் யார் யாரையோ எல்லாம் நம்புமாறு பல வழிகளிலும் வற்புறுத்தப்படுகின்றனர். இந்தியா பற்றிய நம்பிக்கை ஒரு வகையில் இல்லாவிட்டால் இன்னொரு வகையில், வளர்க்கப்பட்டே வருகிறது. கடைசியாக பாரதீய ஜனதா கட்சியை நம்பினால் காரியம் கைகூடும் என்கிற நம்பிக்கையை வளர்க்கிற முயற்சிகளில் வந்து நிற்கிறோம். இந்தியாவில் நாம் நம்புமாறு பரிந்துரைக்கப்படுகிற அரசியல் அமைப்புக்களதும் அரசியல் தலைவர்களதும் எண்ணிக்கை இந்து கடவுளரின் எண்ணிக்கையை எப்போது தாண்டும் என்று என்னாற் கூற இயலாது. ஆனால், என்றாவது தாண்டும் என்று தான் நினைக்கிறேன். அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய சமூகம், ஐ.நா. சபை, சர்வதேச சமூகம் என்று பலவேறு தெய்வங்களை வேண்டிக் கொள்ளுவதில் தான் தமிழ்த் தலைமைகளது கவனங் குவிந்திருக்கிறது.


பலஸ்தீன மக்கள் எவ்வாறு நாடகமாடி ஏய்க்கப்பட்டார்களோ அவ்வாறே தமிழ் மக்களும் நாடகமாடி ஏய்க்கப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் இயக்கம் அந்த நாடகத்தை நன்றாக அறிந்து அம்பலப்படுத்தியதால் அவர்கள் இஸ்ரேலினதும் அதன் எசமான நாட்டினதும் எசமான நாட்டின் கூட்டாளிகளாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறது. எனினும், மக்கள் ஆதரவை அவ்வாறான தண்டனைகள் வலுப்படுத்துகின்றன. ஹமாஸ் எவ்வளவு தூரம் மக்களுக்கு நெருக்கமாகிறதோ அவ்வளவுக்கு அது தோற்கடிக்க இயலாத ஒரு சக்தியாக இருக்கும். பலஸ்தீன மக்கள் இன்னமும் இன்னல்களிடையிலும் இடிபாடுகளிடையிலும் அகதி முகாம்களிலும் வாழுகின்றனர். இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டோரும் திரும்பி வருவது பற்றியும் தாயகம் பற்றியும் இன்னமும் பேசுகின்றனர். இந்த விடயத்தில் தமிழ் நடுத்தர வர்க்கத்தினரின் நிலையினின்று அவர்கள் ஆரோக்கியமான ஒரு வகையில் வேறுபடுகின்றனர்.


விடுதலை என்பது காலக்கெடு வைத்து சொல்லப்படுவதல்ல. விடுதலை என்பது எவரும் வந்து பெற்றுத் தருவதுமல்ல. எந்தவொரு அரசியல் போராட்டத் தலைமையும் வழிகாட்டலாமே ஒழிய ஒரு சமூகத்தின் ஏகப் பெரும்பான்மையான மக்கள் திரள் தனது தோள்கள் மீது விடுதலைப் போராட்டத்தை ஏற்றுச் சுமந்து முன்செல்லாத வரை விடுதலை வெல்லப்படக் கூடியதல்ல. ஒரு ஆயுதப் போராட்ட வெற்றியை எடுத்து அதை விடுதலையாக மாற்றுகிற பணி மக்களுடையது. எனினும், தமிழ்த் தேசியவாத அரசியல் மரபில், மக்கள் அரசியல், மக்கள் போராட்டம் என்கிற கருத்தாக்கங்கள் இன்று வரை வேரூன்றவில்லை. தமிழ் மக்களின் விடுதலையைக் குத்தகைக்காரர்கள் எவராலும் பெற்றுத்தர இயலாது என்கிற உண்மையை நாம் மறக்கவிடலாகாது.


தொண்டமான், சந்திரசேகரன் போன்றோரின் துரோகங்கள் பற்றிக் கசப்புடன் பேசப்படுகிறது. ஆனால், மலையகத் தமிழருக்கு அவர்கள் செய்து வந்துள்ள துரோகத்தைவிட அதிகமாக வடக்கு - கிழக்கின் தமிழர்கட்கு என்ன செய்துள்ளனர்? முஸ்லிம் தலைவர்களை நம்ப முடியாது என்று பேசப்படுகிறது. அவர்களை முஸ்லிம் மக்களே நம்ப இயலவில்லை. அதுபோகத், தமிழ்த் தலைவர்களைத் தமிழ் மக்கள் நம்ப முடிகிறதா?
இன்று தமிழ்த் தேசிய இனம் ஒரு அபாயகரமான திருப்புமுனையை நோக்கி நிற்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிச் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாகத் தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம் இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லாரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக ஒடுக்குகிற திசையை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.


உலகில் நீதியையும் நியாயத்தையும் மனித உரிமையையும் மதிக்கிற எல்லாரது நட்பும் தமிழ் மக்களுக்கு தேவையானதும் பயனுள்ளதும் என்பதில் மறுப்பில்லை. ஆனால், அந்த நட்பு ஈவோருக்கும் இரப்போருக்கும் இடையிலான உறவாக இருக்கக்கூடாது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஒடுக்குமுறை தொடர்பான எப்பிரச்சினையும் கருணையினால் தீர்க்கப்பட்டதில்லை.


என்.ஜி.ஓ.க்கள் கருணையின் பேரிலும் மனிதாபிமானத்தின் பேரிலும் மக்களை மேலும் மேலும் அடிமைத்தனத்திற்குள் அமிழ்த்துகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் என்.ஜி.ஓ.க்கள் மூலம் தமது கருமங்களை ஆற்றிக் கொள்ளுகின்றன. இந்த நாடு முழுவதையும் அடிமைப்படுத்த முனைப்பாக நிற்கின்றன அவையும் அவற்றின் ஏவலில் இயங்குகிற எந்த அரசாங்க நிறுவனமும் விடுதலைக்கு வழி செய்யப்போவதில்லை.


தமிழ் மக்கள் முழுமையாக அரசியல் விழிப்புப்பெறாமல் அவர்கட்கு விடுதலையும் இல்லை விமோசனமும் இல்லை. அதுவரை கருணையின் பேரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவர்.



பேராசிரியர்.டாக்டர்.திரு.சி.சிவசேகரம்


நன்றி:தினக்குரல்




Monday, October 08, 2007

அப்பட்டமான பொய்மை...

அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?


சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழகத்தின் ெபாருளாதாரம் பெரும் நன்மை பெறும் என்ற வாதத்தை முன்வைத்து, அத்திட்டத்தைத் தொடருவதற்கு ஆதரவாகப் பலவேறு தி.மு.க. தோழமைக் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. அத்திட்டத்தால் ஒட்டுமொத்தமான பொருளாதார நன்மை உண்டா என்பது இன்னமும் ஐயத்துக்குரியது. ஆயினும், அதன் மூலம் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள், குறிப்பாக இலங்கை தொடர்பானவை, நிறைவேறும் வாய்ப்புக்கள் அதிகம். இவ்விடயத்தில் அகில இந்திய அரசியல் தளத்தில் கருத்து முரண்பாடுகள் வெடித்துள்ளன.


எனினும், அதிகமாகப் பேசப்படாத சில உண்மைகள் முக்கியமானவை. இத்திட்டத்தால் நிச்சயமாகத் தி.மு.க.வினர் சிலரதும் தி.மு.க. தலைமையில் உள்ள குடும்பத்தினதும் செல்வம் பெருகும். இங்கே மேல் கொத்மலைத் திட்டத்தின் மூலம் எத்தனை பேர் சம்பாதிக்கப் போகிறார்கள். எந்த மலையகக் கட்சிகளது தலைமைகள் தங்கள் துரோகத்திற்காகப் பலவாறான சன்மானங்களைப் பெற்றுள்ளனர் என்று தெரியுமானால், தமிழகத்தில் எவ்வளவு காசு கைமாறும் என்று ஊகிப்பது கடினமானதல்ல. இது தங்கப் புதையல் என்றால் அது தங்கச் சுரங்கம் - அள்ளப் போகிறவர்கட்கு.


சிங்களத் தீவினுக்கோர் பாலமமைக்கிற யோசனை ஏழு ஆண்டுகள் முன்பு எழுந்து பிறகு ஏனோ தானாகவே கைவிடப்பட்டது. பாலம் அமைப்பதானாலும் பள்ளந் தோண்டுவதானாலும் அவற்றுக்கான இராணுவ மேலாதிக்க நோக்கம் ஒன்றே. அது பற்றி எவரும் பேசப்போவதில்லை. ஆனாலும், எதையெதையோ பற்றியெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன. பொதுவாக அவற்றில் நேர்மையில்லை. அது இந்திய, தமிழக தேர்தல் அரசியலின் அடையாளம். இன்று இன்னொருமுறை ராமாயணமும் சேது சமுத்திரத்தால் அரசியலாகிவிட்டது.


ராமாயணம் வரலாறல்ல. அதற்கு வரலாறு கூறும் நோக்கம் இருந்ததுமில்லை யாரும் ரகுவம்சத்துக்கு வாரிசு உரிமை கோரியதுமில்லை. ராமாயணம் எல்லா இடத்தும் ஒரே விதமாகச் சொல்லப்பட்ட கதையுமல்ல. ராமாயணத்தின் மீது, அது எங்கு எப்போது கூறப்பட்டது என்பதைப் பொறுத்து, ஒரு அதிகார வர்க்க நலன் சார்ந்த பார்வை திணிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய சமூகத்தின் ஆதிக்கச் சிந்தனையும் அற விழுமியங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. முரண்பாடுகள் கூர்மைபெற்ற சூழல்களில் அது ஒரு தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கவும் பயன்பட்டுள்ளது. மகாபாரதத்தை விட அதிகமாகவே ஆணாதிக்கமும் சாதியமும் ராமாயணத்தில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன எனவுங் கூறலாம். தமிழுக்கு வந்த ராமாயணம் ஒரு பெண்ணை அயலவன் தொட்டாலே கற்பிற்குக் கேடு என்கிற கருத்தை வற்புறுத்துமளவுக்கு இராவணன் சீதையைத் தரையோடு பெயர்த்துக் கொண்டு சென்றதாக கூறுகிறது. ராமாயணம் ஒவ்வொன்றிலும் வருகிற பல விடயங்கள் பகுத்தறிவுக்கு முரணானவை மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் நோக்கினால் உண்மை சாராதவை. எனினும், இராமாயணம் தென்னாசியாவுக்கும் அப்பால் இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வரை மக்களின் கவனத்தைப் பல நூற்றாண்டுகளாக ஈர்த்த ஒரு காவியம். அது கூறுகிற விழுமியங்களுடன் ஏதோ வகையில் அவர்கள் உடன்பாடு காணுகின்றனர். அந்தளவில் அதை நாம் மதிக்க வேண்டும்.


ராமாயணத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய ஒரு நிகழ்வு இருந்திருக்கலாம். ஆனால், அது கூறும் இடங்கள் எல்லாம் இன்று நாங்கள் அடையாளப்படுத்துகிற இடங்களல்ல.



அவையெல்லாம் ராமாயணத்துடன் தொடர்புடையன என்றால் புற்பக விமானத்தையும் அதனுடன் கடல் தாண்டப் பறந்ததையும் மட்டுமன்றி ராவணனுக்குப் பத்துத் தலைகள் என்பதையும் நாம் நம்பலாம். இலங்கைக்கும் ராமாயணத்துக்கும் கட்டப்பட்ட முடிச்சு, காலத்தாற் பிற்பட்டது. இராமாயணம் இந்தியாவின் தென்புறம் வந்த பின்பே இந்தத் தீவு இராமாயணங் கூறுகிற லங்காவுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனாலும், தென்னாசியப் பண்பாட்டில் புராணப் புனைவுகட்கும் வரலாற்று உண்மைகட்குமிடையே தெளிவான வேறுபடுத்தல் கிடையாது. இது நிலவுடைமைச் சமுதாயச் சிந்தனைகள் சில நம் மீது இன்னமும் கொண்டுள்ள அழுங்குப்பிடி இது நெகிழக் காலமெடுக்கும். அதேவேளை, நவீன விஞ்ஞானத்தை ஆதாரங்காட்டி, மூட நம்பிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நம்மிடையே சிந்தனையில் நேர்மைக் குறைபாடுள்ளது. கடவுளின் பேரால், மரபின் பேரால் ஆன்மிகவாதிகள் எனப்படுகிற பலர் மனமறியப் பொய்யுரைக்கிறார்கள். நம்புகிறதாகப் பாசாங்கு செய்கிறவர்களும் அதற்கு உடந்தையாகிறார்கள். எதை நம்புவது சிலருக்கு வசதியானதோ அதை நம்புமாறு பலரும் வற்புறுத்தப்படுகிறோம். சில சமயம் அவ்வாறு நம்புவது நமக்கும் வசதியாகிறது.


இவ்வாறான பொய்களின் விளைவுகளாக எத்தனை வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன? எத்தனை இனக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன? எத்தனை போர்கள் நடந்துள்ளன?


எதுவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் நமது வரலாறு நூற்றாண்டுகளால் மட்டுமல்ல, பல ஆயிரமாண்டுகளாலும் பின் நகர்த்தப்படுகிறது. புனைவுகளை ஆதாரமாகக் கொண்டு புதிய புனைவுகள் உருவாக்கப்படுகின்றன. வெட்கமில்லாமல் எழுதப்படுகிற பொய்களை அதைவிட வெட்கக் கேடாக நமது ஏடுகள் பிரசுரிக்கின்றன.

ராமர் பாலம் ஒரு அற்புதமான கற்பனை. அணிற் பிள்ளை கூட ஒரு கல்லை எடுத்துப் போட்ட கதை சுவையான கற்பனை. ஆனால், அவை உண்மைகளல்ல. அவை பற்றி நாம் விவாதிப்பதே வெட்கக் கேடானது. அதைவிடப் பூமி தட்டையா, உருண்டையா என்று விவாதிக்கலாம். அல்லது பூமியைச் சூரியன் சுற்றுகிறதா, சூரியன் பூமியைச் சுற்றுகிறதா என்று விவாதிக்கலாம். அவையே பயனற்றுப் போன விவாதங்கள். ஆனால், ஒரு கால்வாயை வெட்டுவது தேவையா இல்லையா என்பதை விவாதிக்க நமக்கு வேறு நல்ல நியாயங்களே இல்லையா?


கருணாநிதிக்குப் பகுத்தறிவு திரும்பியிருப்பது பற்றிச் சிலர் மகிழ்ச்சியடையலாம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிற விதமான ஞானம் இது. தேர்தல் அரசியலுக்காகத் தி.மு.க. எப்போதோ கைகழுவிவிட்ட விடயத்தை ஏன் இப்போது பேச வேண்டும்? ராமாயணம் என நாமறிந்த எந்தக் கதையுமே அப்படியே நடந்ததல்ல என்பதை இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் மட்டுமன்றி இந்து அரசியலை முன்னெடுத்த பிரபல அரசியல் தலைவர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், ராமன் இருக்கவில்லை என்று எப்படி எவராலும் உறுதியாகக் கூற முடியும்? கம்பரதோ வால்மீகியினதோ துளசிதாசரதோ ராமன் இல்லாதிருக்கலாம். இன்று இருக்கிற ஒவ்வொரு ராமனும் ஒரு புனைவாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு ஏதோ ஒரு அடிப்படை இருந்தது. ஒவ்வொரு இராமனையும் ஏற்பவர்களது மனதைப் புண்படுத்தாமல் கருணாநிதியாற் பேசியிருக்க இயலும். ஆனாலும், அவரது பேராசை அவரை அவசரப்படுத்திவிட்டது.


ஆரிய - திராவிடப் பகை பற்றிப் பேசித் தமிழகத்தில் அரசியல் நடத்த இயலாமற் போனதற்கு எந்தப் பார்ப்பனச் சதியும் காரணமில்லை. திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட சீரழிவே அதற்குக் காரணம். இந்தியாவில், தலித்துக்கள், பழங்குடியினர், ஒடுக்குமுறைக்குட்பட்ட சிறிய தேசிய இனங்கள், நிலமற்ற விவசாயிகள் போன்றோருக்காகக் குரல்கொடுக்கிற விதமாகத் திராவிட இயக்கம் விரிவுபடுத்தப்படவில்லை. அது தமிழரிடையே சில சாதிப் பிரிவுகட்குரிய வசதி படைத்த பகுதியினரது நலன்களையே சார்ந்து இயங்கியது. எனவே, தான் சமூகத்தின் அடிநிலையிலிருந்த மக்களைப்பற்றி அதனாற் பேச முடியவில்லை. ஈ.வெ.ரா. பேசினார். ஆனால், அவரது பார்ப்பன எதிர்ப்பு அரசியல் காரணமாக, அவர் தமிழகத்தின் பிற சமூக ஒடுக்குமுறைகள் பற்றிக் காட்டியிருக்கக் கூடியளவு கவனத்தைக் காட்டத் தவறிவிட்டார். அவரது ராமாயண எதிர்ப்பு இயக்கமும் நீண்டகாலத்திற்குத் தொடரப்படவில்லை.

அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியலின் தேவை, பிள்ளையார் சிலை உடைப்புக் கூட அப்படித்தான். அவருடைய வாரிசுகளாக வளர்ந்து பிரிந்து போன `கண்ணீர்த் துளிகளின்' கதை வேறு. அவர்கள் பூரணமான அரசியல் வணிகர்கள். எனவே, தான் அவர்களது விவாதங்கள் மக்கள் நலன் சாராத விடயங்களிற் கவனங்காட்டுகின்றன. அவர்கள் எக்கேடாயினும் கெடட்டும்.

சேது சமுத்திரம் நமது சுற்றுச் சூழலுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி நமது அறிஞர்களால் எழுத முடியாதா? தங்களுக்கு விளங்காத வரலாற்றையும் புவியியலையும் விஞ்ஞானத்தையும் பற்றிச் சில பேர் பக்கம் பக்கமாக விவாதிக்க நமது ஏடுகளின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களுட் வாராவாரம் இடமொதுக்கப்பட்டுள்ள அளவு சேது சமுத்திரத்தின் அரசியல் பற்றி ஆராய ஏன் எல்லோரும் பின் நிற்கிறார்கள்?
மக்களுடைய அறியாமையையே ஆதாரமாகக் கொண்டுதான் மதவாத, தேசிய வாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. நமக்குள் கேடான தேசியவாத, மதவாத அரசியலைக் கண்டிக்க நமக்கு இயலும். நமக்குச் சாதகமாக அமைகிறபோது நமக்கு அதைக் கண்டிக்க இயலாது. நாம் இவ்வாறான அவலத்தினின்று விடுபட வேண்டும்.

சரி பிழைகள் பற்றி நமக்கு நேர்மையான பார்வை வேண்டும். நமது நம்பிக்கைகளை நாம் மீளவும் மீளவும் கேள்விக்குட்படுத்துவதன் மூலமும் நேர்மையாகவும் பகுத்தறிவு சார்ந்தும் சிந்திப்பதன் மூலமுமே நாமும் நமது சமூகமும் உய்வும் உயர்வும் அடைய இயலும். நம்மைப் பிணித்துள்ள அப்பட்டமான பொய்மை வலைகளை முதலில் நாம் அறுத்தெறிய வேண்டாமா?


மறுபக்கம்

கோகர்ணன்

தினக்குரல், நன்றி.