Tuesday, October 23, 2007

மு.மயூரனின் கேள்வியை முன்வைத்துச் சில கருத்துக்கள்.

மு.மயூரனின் கேள்வியை முன்வைத்துச் சில கருத்துக்கள்.


"மக்கள் போராட்டம் என்றால் என்ன?"


//மக்கள் போராட்டம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று நீங்கள் யாராவது விளங்கப்படுத்தினால் நன்றாக இருக்கும். வெறுமனே அந்த சொல் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஆழம் யாருக்கும் புரிவதாயில்லை.//


இன்று, நிலவுகின்ற அமைப்பினால் மக்கள் இனங்களில் அதிகமான பகுதி மக்கள் உயிர்வாழ்வதற்காக ஓடாய் உழைத்து வாழவேண்டியிருக்கிறது.அப்படி உழைத்தாலும் சம்பாத்தியம் உயிர் வாழ்வுக்கான அதிமுக்கியமான மனிதாயத் தேவைகளைப்(உணவு,உடை,உறையுள்,மருத்துவம்,கல்வி,ஆன்மீக வளர்ச்சி)பூர்த்தி செய்வதற்கே முடியாத திண்டாட்டமாக இருக்கிறது.எனினும், "எனக்குக் கூலியைக் கொஞ்சம் கூட்டித் தாருங்கள"; என்று கேட்பது,நிலவுகின்ற விலைவாசிகளினதும்-பணவீக்கத்தினதும் விளைவுகள்தான் என்பதால் அது நியாயமாக இருக்கிறது.இது,இந்த அமைப்பில் வாழும் ஒருவருக்கு ஏற்படும் வாழ்வியல் யதார்த்தம்.ஒரு போராட்டம்-உழைப்பவர்கள் உழைப்பை வழங்கித் தமது உழைப்புக் கேற்ற ஊதியத்தைக் கோரும் உண்மையான முரண்பாடு இது.


இதைச் சுலபமாக விளங்கவே இப்படிச் சொல்லப்பட்டது.

இந்த முரண்பாடானது அந்தவுழைப்பையும்,அதனால் ஏற்படும் உபரி மதிப்பீட்டையும் சமுதாயத்தில் திருடுகிறவர்களை உடமையாளர்களாக்கியுள்ளது.


எனவே,மனித சமூகத்தில் உழைப்பவரும்,உழைப்பை அபகரிப்பவரும் என்ற இரண்டு வர்க்கம் தோன்றுகிறது.இது முதலாளியத்தில் தவிர்க்க முடியாத வர்க்க நிலை.எனவே மனிதர்கள் இப்போது வர்க்கமாகப் பிளவுண்டு போகிறார்கள்.இங்கே பற்பல முரண்பாடுகள் இனித் தோன்றும்.முதலாளியாக மாறியவருக்கும்,தொழிலாளிகளாக இருப்பவர்களுக்கும் சதா முரண்பாடுகள் முளைவிடும்.ஏனெனில், முதலாளிகள் தொழிலாளரின் உழைப்பைத் திருடுவதானால் மட்டுமே செல்வத்தைச் சேகரிக்க முடிகிறது. இயற்கையிலுள்ள கனிவளங்களைத் தொழிற்சாலைவரை எடுத்துவந்து,பின்பு அதைப் பொருளாக்குவதும் உழைப்புத்தான்-அது தொழிலாளியால்தான் முடிகிறது.


இங்கே, இரண்டு தளத்தில் முதலாளிகள் வருமானத்தைப் பெறுகிறார்கள்.ஒன்று அனைவருக்கும் பொதுவான புவிப்பரப்பிலுள்ள கனிவளம்,மற்றது அதை அகழ்ந்து பொருளாக்கும் மனித உழைப்பு.இது, முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை என்ற அமைப்பாண்மையால் சமுதாயத்தில் நியாயப்பட்ட அமைப்பாக இருக்கிறது.இந்த அனியாயமான திருட்டைப் பாதுகாக்க வன்முறைசார் கருத்துக்களும்,வன்முறைசாரக் கருத்துக்களாலும் அரச அமைப்பு ஒன்று தோன்றி,உழைப்பவரை அடக்குகிறது.அல்லது கூலி உயர்வு கேட்கும் அப்பாவிகளைச் சட்டம்,பொலிஸ் என்று ஏவி ஒடுக்கி வருகிறது.இங்கே உழைப்பவர்கள் ஒரு குடையுள் இணையப் பார்க்கிறார்கள்.தமது நியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள்.



ஆனால்,உடமையுடையவர்கள் தொழிலாளிகளைப் பிளப்பதற்காக அவர்களுக்குப் பிரிவினைகள் இருக்கக் கூடிய உடல்-உள மற்றும் பிறப்பால் வந்த தோற்றங்களை வைத்து அவர்களைப் பிரித்தெடுகிறார்கள்.இது சாதி,மத,இன அடையாளமாகவும்,மொழி வழிச் சமுதாயங்களாகவும் பரிவுகளை ஊட்டி வளர்த்து உழைப்பவர்களை,ஒருவருக்குள் ஒருவரை மோதவிட்டுத் தமது உடமையையும்,செல்வத்தையும் தொடர்ந்து காப்பாற்றும் போது,அவை ஒரு கட்டத்தில் இனவொடுக்குமுறை,சாதியொடுக்குமுறை,மதப் போர் என்று தொடர் அடிமைப்படுத்தல்கள் நிகழ்கிறது.


இங்கே,உடமையாளர்கள் தம்மைப் பலப்படுத்தும் ஆயிரம் கருத்துக்களால்,கல்வியால் உழைப்பவரை ஒடுக்கி விடுகிறார்கள்.இப்போது மக்கள்"இதுவரை வாழ்ந்ததுபோல் இனி மேற்கொண்டு வாழ முடியாது"என்ற முடிவிற்குக் கோடிக்கணக்காக வரும்போது புரட்சிகள்(மக்கள் போராட்டம்)வருகிறது.இங்கே உண்மையில் நிகழ்வது என்னவென்றால்,இந்தப் புரட்சியின் அவசியம் சமுதாய வளர்ச்சியின்(மனிதர்கள் உயிர்வாழ உணவு தேடியபோது "வேடர்களாக"பின்பு தானியங்களைச் சேகரித்து வைத்து வாழும்போது நிலத்தை உடமையாக்கி நிலப்பிரபுக்களாக"ஆண்டான் அடிமைச் சமூகமாக,இது உற்பத்திச் சக்திகளின் தேவை-கண்டுபிடிப்போடு முதலாளியமாக...) புறவய விதிகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே.
எனவே,புரட்சிகள்(மக்கள் போராட்டம்)கட்டளைப்படி நடக்க முடியாது என்றாகிறது.ஒரு குறிப்பிட்ட தரணத்தையொட்டி மக்கள் போராட்டம் நடப்பதற்கில்லை.ஆக,அவை(மக்கள் போராட்டம்)வரலாற்று வளர்சிப் போக்கின் இயக்கத்தோடு முதர்ச்சியடைகிறது.பல்வேறு உள்நாட்டு,வெளிநாட்டு அரசியல்-பொருளியல் காரணங்களைப் பொறுத்துப் புரட்சிகள்(மக்கள் போராட்டம்)உரிய நேரத்தில் வெடித்துக் கிளம்புகிறது.

வரலாற்று வளர்ச்சிப் போக்கில் குறிப்பிட்டவொரு கட்டத்திலுள்ள சமுதாயம்,தனக்கே உரித்தான தனியொருகுணமுடைய சமுதாயமாக நிலவுகிறது.இங்கே,வரலாற்றுக் கட்டத்தில் பல கட்ட பொருளாதாரப் புற நிலை நிகழ்வுகள் இருந்துள்ளன.இவைகள் தத்தமது குணவியல்புக்கு ஏற்ற சமுதாயத்தைக் கொண்டிருந்தது.ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரு கூட்டுச் சமூகமாக வாழ்ந்தார்கள், இதைப் புரதான கூட்டுச் சமுதாயம் என்றும் பின்பு இதுவே மாற்றப்பட்டுஅடிமை உடமைச் சமுதாயமாக மாறுகிறது.இங்கே, உழைப்பவர்களை அடிமையாக்கி வருத்தி அவர்களைப் பிழிந்தெடுத்தார்கள்.இதையும் மனிதர்களில் சிலர் பெரும் நிலத்தைப் பயிரிடும் பயன்பாட்டுக்குள் கொணர்ந்தபோது, நிலப்பிரபுத்துவம் தொடங்கி விடுகிறது.இதுவும் கூலிவிவாசாயிகளாக மாற்றப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்திச் சுரண்டுகிறது.இது கொத்தடிமைகளாக்கிச் சமுதாயத்தக் கேடாக்கியபோது,சாட்சாத் முதலாளியம் தோற்றங்கண்டு மனிதருக்கு மகத்துவம் என்று அறைகூவித் தனிப்பட்டவரின் சுதந்திரத்தை வலியுறுத்தி அன்றைய பொழுதில் மிகப் பெரும் புரட்சியைச் செய்துகாட்டியது.இங்கே ஒவ்வொரு அமைப்புக்கும் ஒன்று முற்போக்காக வருகிறது.பின்பு, அதுவே உழைப்பவர்களை அடிமைப் படுத்துகிறது.

இது எதனால்?

மனிதரில் சிலருக்கு சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகும் பொருளாதார விஞ்ஞானம் தெரிகிறது.அங்கே,முடிவு தெரிகிறது!

அதாவது, சந்தைப் பொருளாதாரமாக இருக்கும் தனியுடமை முறையானது சமுகத்தில் பொதுவாக இருக்கும் இயற்கையையும் அதன் பயன்பாட்டிற்காய் உழைப்பாளியால் உருவாக்கப்பட்ட உற்பத்திச் சக்திகள்(ஜந்திர வகைகள்) தனியுடைமையாக இருப்பதே மனித சமூகத்தில் போட்டி,போர்கள் மலிகிறதாக இனம் காணப்பட்டபோது,இதை மாற்றிச் சமுதாயத்தில் உற்பத்தி ஆதாரங்களைப் பொதுவாக வைத்து அதன் வடிவில் உற்பத்தி உறவுகள் நிலைக்கும்போது மக்கள் சமாதானமாகவும்,உயிர்வாழும் அர்த்தத்துடனும் வாழ முடியுமென்று காணப்பட்டது.

இங்கேதான், தனியுடமைவாதிகள் தமது வர்க்கச் சிதைவையும்,தாமும் உழைத்துண்ண வேண்டிய நிலையையும் மறத்து அதற்கெதிராகப் போரிடுகிறார்கள்.இந்தப் போர் என்ன வடிவில் வந்தாலும் வரலாறு பூராகவும் வர்க்கங்களுக்கிடையிலான போராகவே வருகிறது-தொடர்கிறது.

இங்கே, நமது ஈழப்போராட்டதை உதாரணமாக எடுத்தால், அது என்ன நிலையில் தோன்றுகிறது-என்ன நிலையை அடைகிறது,எவரது நலன்களைக் காக்க முனைகிறதென்பதை ஆராய்ந்தால், மக்கள் போராட்டத்தின் தன்மை புரியும்.அங்கே, எவர் எந்தத் தளத்திலிருந்து போராட வேண்டுமென்று தீர்மானிப்பது வர்க்க உணர்வே.ஒருவர் கொண்டிருக்கும் வர்க்கத்தளமே அவரைத் தனது வர்க்கத்துக்காகப் போராட அனுமதிக்கிறது.இதை மறுத்து ஆளும் வர்க்கம் மொழிசார்ந்தும்,மதம்சார்ந்தும் உழைப்பவரைத் தனக்குள் இணைத்துத் தனக்குள் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்க்க முனைகிறது.உதாரணமாகப் பல்லினங்கள் வாழும் இலங்கைக்குள் இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி,அதிகாரப் பகிர்வு,பங்கீடு,சந்தைப் பகிர்வு,உற்பத்தி வலு-ஊக்கம் என்பதுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்குத் தீர்வுகாண்பதற்காக இனங்களுக்குள் இருக்கும் உடமை வர்க்கம் இனவாதத்தைக் கையிலெடுத்து மக்களை-உழைப்பவர்களை மொழிகளுக்கூடாகக் கோடுகிழித்துக் கூறுபோட்டுச் சண்டையிடுகிறது.இங்கே,தேசியயினங்களாக இருக்கும் ஒவ்வொரு இனமும் தத்தமது இன அடையாளங்களுக்கூடாகப் பிளவுபட்டுப் போரிடுவது இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்க(உற்பத்திச் சக்திகளை உடமையாக வைத்திருப்பவர்)நலன்களுக்கானதே.



உதாரணமாகத் தமிழீழம் ஒன்று உருவாகினாலும்(நேற்றைய அநுராதபுரத் தாக்குதல்போல் ஓராயிரம் தாக்குதல் நிகழ்வதற்கும் அப்பாவி மக்களின் குழந்தைகளே முயல வேண்டும்.அப்படி முனைந்தாலும் தமிழீழம் மலர வாய்ப்பு இல்லை என்பது வேறு விஷயம்) உழைக்கும் தமிழர்களுக்கும்,உடமைத் தமிழர்களுக்குமான வர்க்கப்போர் தொடரும்.


அப்போது இன்றைய தேசியவிடுதலைப் போராளிகள் நாளை நமக்குள் இருக்கும் பெருந்தொகையான கூலிகளை-உழைப்பவர்களை ஒடுக்குவார்கள்.நல்ல உதாரணம்: வடமாகாணத்தில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டம்-அதைப் புலிகள் எங்ஙனம் எதிர் கொண்டார்கள்?தமிழகத்தை இன்னொரு உதாரணத்துக்கு எடுத்தால்,தமிழகம் அண்ணளவாகத் தமிழர்களாலேயேதான் ஆளப்படுகிறது.எனினும், தமிழகத்துப் போலிசுகள் உழைக்கும் மக்களை-தமிழர்களை ஏன் ஒடுக்கிறது?தமிழக அரசு அனைத்துத் தமிழர்களுக்கும் நீதியானவொரு அரசாக இருக்கிறதா?-அங்கே உழைப்பவர்களுக்கும்,உடமை வர்க்கத்துகஇகுமான உறவு எப்படியுள்ளது?



இதே கதைத்தான் ஈழத்துக்கும்.



ஆகையினால்,இன்றே வர்க்கப் போரைச் செய்யும் உழைக்கும் மக்களுக்கான புரட்சிகர அதிகாரத்தையும்,அரசையும் நிறுவும் மக்கள் போராட்டப் பார்வை அவசியமாகிறது.இங்கே மக்கள் போராட்டம் என்பது இனம்,மொழி,மதம் தாண்டிய உழைப்பால் ஒன்றுபடும் மக்களின் போராட்டமாகும்.இது,இன்றைய இலங்கைக்குள் இன்னும் பலமுனை-வகை உப முரண்பாடுகளோடு இருப்பதால் குறைந்தபட்சமாவது தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமக்கானவொரு அதிகாரத்துக்கான புரட்சியைத் தமிழ்-சிங்கள ஆளும் வர்க்கத்துக்கெதிராக அணிதிரண்டு முன்னெடுக்கும்போது,இதன் உள்ளடக்கமே தவிர்க்க முடியாது இலங்கையிலுள்ள அனைத்து இன உழைப்பாளிகளோடும் நமது உறவைப் பலப்படுத்தி இலங்கையில் புரட்சியைச் சாதிக்கும்.


அந்த வலு இலங்கைப்பாட்டாளிய வர்க்கத்துக்குண்டு.இதைக் கண்ணுற்ற வெளிப்புறச் சக்திகள் நம்மை இனங்களாகப் பிளவுப்படுத்திக் குறுந்தேசிய வெறிக்குள் அமுக்கி,நமது போராட்டத்தைத் திசை திருப்புகிறார்கள்.


எனவே,நமது போராட்டப்பாதையில் பற்பல தோல்விகள் சில வெற்றிகளின் பின்னே மறைந்திருக்கிறது.இது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் உடமை-ஆளும் வர்க்கத்தின் முரண்பாடுகளை ஓரளவு தீர்க்க முனையும் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு கொள்ளும் உறவில் தனது போராட்டத்தை மட்டுப்படுத்தித் தவிர்க்க முடியாதாவொரு "தீர்வுக்கு"வரும்.அப்போது தமிழ் ஆளும் வர்க்கம் எதைச் சொல்கிறதோ, அதுவே முழு மொத்தத் தமிழரினதும் தீர்வாக இருக்கும்.அப்போது,மீளவும் தமிழ் பேசும் உழைப்பாளர்கள் தமது எஜமானர்களை சிங்களம் பேசாது தமது தாய்மொழியே பேசும் புற நிலையில் கண்டடைவார்கள்.



இது தேவையா?



இது குறித்துப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவான கட்டுரை எழுதுகிறோம்.



பரமுவேலன் கருணாநந்தன்
23.10.2007

6 comments:

Unknown said...

தயவுசெய்து அந்தப் படங்களை மட்டும் நீக்குமாறு உங்களை மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மு. மயூரன் said...

பரமுவேலன்,

என்னுடைய கேள்வியைக் கருத்திலெடுத்துப் பதிலளிக்க முனைந்தமைக்கு மிகவும் நன்றி.

தமிழ்பித்தன் said...

சரி தம் அடிச்சு களைச்சுப் போனீர் ஓடிப்போய் ஒரு தம்மடிச்சுட்டு வாரும்

P.V.Sri Rangan said...

மயூரன், இந்த நடுச்சாமப் பொழுதிலும் இதை வாசித்துப் பதில் தந்த உங்களுக்கு என் நன்றி-வணக்கம்!

K.R.அதியமான் said...

////நிலவுகின்ற விலைவாசிகளினதும்-பணவீக்கத்தினதும் விளைவுகள்தான் என்பதால் அது நியாயமாக இருக்கிறது.////

வறுமைக்கு காரணமும், விளைவுகளும்

செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.

இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிறது.

1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.

1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிறது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. மத்திய அரசின் நிகர வரி வருமானம், 1995ல் 1,10,354 லச்சம் கோடியில் இருந்து 2007ல், 5.48,122 லச்சம் கோடியாக ஆக உயர்ந்தது. 1991இல், இரண்டு வார இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பே இருந்தது. இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து, 8,64,000 கோடி ரூபாய் மதிப்பிற்க்கு டாலர் கையிருப்பு சேர்ந்துள்ளது. அந்நிய செலவாணிக்காக் I.M.F / World Bank இடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை.

ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.

இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.
--------------------------------

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

http://nellikkani.blogspot.com/

P.V.Sri Rangan said...

//இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. // :-)))))


//1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.//;-)



//1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. // :-o



//ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.// :-)))))))))))))))



அதியமான் தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

பொருளாதாரம் குறித்த ஆரம்ப நிலைப் புரிதல்கூடவின்றி நீங்கள் எழுதி என்ன பயன்?

ஜேர்மனியின் பொருளாதாரத்திலிருந்து மலேசியா சிங்கப்பூர்,இந்தியாவென்று அகலக்கால்வைக்கின்றதாக நீங்கள் உணரும் கருத்துக்கள் பொருளாதார அறிவற்ற பார்வையென்று நான் சொல்லமாட்டேன்.அதை, நீங்கள் உணருவதற்காகக் குறைந்த பட்சமாவது பொருளாதாரத்தில் சில்வியோ கேசலையாவது (Silvio Gesell)கற்றறியுங்கள். அப்போதாவது உங்கள் புரிதல் மாறுகிறதாவென்று பார்ப்போம்.இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல? :-(

வீணே மனவருத்தப்படாது பொருளாதாரத்தை விஞ்ஞான பூர்வமாகக் கற்று விவாதிக்க வாருங்கள்;please!...