Tuesday, December 04, 2007

இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது...

கொலைகளும்,அதைக்காரணமாக்கிய இராஜ தந்திருங்களும் அந்த இராஜ தந்திரத்தால் முன்னெடுக்கப்படும் மக்கள் விரோத யுத்தங்களும் ஈழத்தமிழ்பேசும் மக்களை உயிர்திருப்பதற்கான சாத்தியப்பாட்டிலிருந்து மெல்ல மெல்லப் பெயர்த்தெடுத்து கொலைக் களத்துக்குள் தள்ளி விடுகிறது. இதனால், இந்தச் சமுதாயத்தின் இருப்பை அசைத்துவிட முனையும் இனவாத அரசியலிலிருந்து, தமிழ் பேசும் மக்கள் விடுதலையடைதலென்பது மீளவும் பகற்கனவாகிறது.

சிங்களப் பாசிச அரசின் இன்றைய அடக்குமுறைப் போர்- அரசியல் நடவடிக்கைகளும்,புலிகளின் தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களைக் காவுகொள்ளும் தந்திரத்தோடு நகர்கிறது.இங்கு தேசத்தின் விடுதலையென்பதற்கான அடிப்படைக் காரணமே மெலினப்பட்டுப்போகிறது.தேசமென்பதற்கான இருப்பே மக்களின் இடப் பெயர்வு-அழிவோடு இல்லாமற் செய்யும் பொறிமுறையோடு இந்திய-இலங்கைத் தந்திரங்கள் புலிகளை-மக்களை அண்மிக்கின்றன.

புலிகள் தமது இயக்க நலனுக்கான போரை முன்னெடுக்கும்போது சிங்கள அரசோ தமிழ் மக்களுக்கான "ஜனநாயகத்தை"க் கோரும் போராட்டத்தைத் தனது நலனோடு சேர்த்துத் தந்திர மாகப் புலிகளை-தமிழர்களை வென்று வருகிறது!இதற்கான சகல வழிகளிலும் தமிழ் மக்களுக்குள்ளிருக்கும் மாற்றுச் சக்திகளின் அனைத்து வளங்களையும் இலங்கை-இந்திய அரசியல் பயன் படுத்தி வருகிறது.தமிழ் மக்களுக்குள் இருக்கும் இத்தகைய சக்திகளைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் தேசிய விடுதலையைச் சாதிக்க வக்கற்ற புலிகளால் சகல குறுங்குழுச் சக்திகளும் புலிகளுக்கு எதிரான சக்திகளாக மாற்றப்பட்டுள்ளார்கள்.


தமது இனத்துக்குள் ஜனநாயகப் பண்பை மறுக்கும் புலிகளால் இத்தகைய நேச சக்திகள் அன்னியமாகிப் போகிறார்கள்.புலிகள் தமது இருப்பை இத்தகைய சக்திகள் அசைத்துவிடுமெனக் கருதுவதுகூட பாசிச முனைப்பின் நோய்க்கூறுதான்.இதனால் இலங்கை அரசின் அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை நோக்கியல்ல மாறாகப் "புலிப் பயங்கர வாதத்துக்கு" எதிரானதாகச் சித்தரிக்கும் நிலைக்கு சிங்களப் பாசிச அரசின் அடக்குமுறைப் போர் தயாராகிறது.


இலங்கை அரசோடு முன்னமே தமது பதவி நலனுக்காகச் சோரம் போன தமிழ்க் குழுக்கள் இன்றைக்குப் "புலிகளின் பயங்கரவாத" முனைப்பைச் சரியாகப் பயன்படுத்துவதால் அந்த இராஜதந்திரத்துக்குப் பலியாவது உண்மையான மாற்றுச் சக்திகளே.இவர்கள் புலிகளின் ஜனநாயக விரோதத்தை முதன்மைப்படுத்தும் நிலைக்குப் புலிகளின் நடவடிக்கைகள் தலைகால் தெரியாது தாண்டவமாடுவதால் எமது நிரந்தர எதிரியான ஆளும் சிங்களச் சியோனிச அரசு தமிழரின் முதன்மையான எதிரியெனும் நிலையை இழந்து தற்காலிகமாகத் தன்னை மறைக்கின்றது.இதனால் மாற்றுச் சக்திகள் புலிகளை வீழ்த்துவதே முதன்மையான பணியாகச் செயற்படும்போது இது இந்திய-இலங்கை அரசுகளின் நீண்ட நாள் திட்டத்தை வலுவாக்கிவிடுகிறது.


அப்பாவி மக்களைத் தமிழ்பேசும் மக்களென்ற ஒரே காரணத்துக்காக முன்றாம்தர மக்களாக அடக்கியொடுக்கிய இலங்கைச் சிங்கள அரசோ இன்று எமது மக்களின் ஜனநாயவுரிமைக்காகப் போராடுவதாக உலக அரங்கில் பரப்புரை செய்கிறது.இதன் உச்சக்கட்டமாகப் புலிகளின் ஜனநாயக மறுப்பு போராட்டத்துக்கு ஏற்ற கோசமாகவும் மாறுகிறது.இதன் செயற்பாடானது தமிழ்மக்களின் நேச சக்திகளை(மாற்றுக் கருத்தாளர்கள்,மாற்று இனங்கள்) இன்னும் அன்னியப்படுத்தி இலங்கையின் அரச பொறிக்குள் வீழ்த்தித் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான தளத்தில் அவர்களை நிறுத்துகிறது.

இத்தகைய சூழலைத் திட்டமிட்டு ஏற்படுத்திய இலங்கையின் அரச தந்திரமானது மிக நேர்த்தியாகத் தமிழரின் அரசியல் வாழ்வைப் படுகுழியில் தள்ளித் தமிழ்பேசும் மக்களை மீள முடியாத அரசியல் வறுமைக்குள் இட்டுள்ளது.


இந்த இராஜ தந்திமானது தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் நிர்மூலமாக்கும் பாரிய அழிப்பு அரசியலை முன்னெடுப்பதாக இருக்கிறது.இதன் உள்ளார்ந்த நடவடிக்கையாக அரசியற் கொலைகள் தாராளமாக நடைபெறுகிறது.இதைப் புலியின்பெயரால் செய்யக்கூடிய நிலையில் இலங்கை அரசியல் உள்ளது.மிக மூர்க்கமாக வான் தாக்குதல் மூலமாக மக்களைப்படாதபாடு படுத்தி அவர்களைப் போராட்ட உணர்விலிருந்து அன்னியப்படுத்துகிறது-அவர்களின் உயிர்களைக் கொன்று,வாழ்விடங்களை நிர்மூலமாக்கித் தாங்கொணாத் துன்பத்தைக் கட்டவிழ்து விடுகிறது.இது புலிகளின் அரசியல் திறமையற்ற போருக்கும்,பாசிச நடவடிக்கைகளுக்கும் கிடைத்த பாரிய அரசியல் பின்னடைவு.

இந்தப் பின்னடைவுக்குப் பின்பான காலம் தமிழ்பேசும் மக்களின் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கைகளுக்காக அரசியல் செய்யும் தலைமைகளை வலுவாக்கும்போது நமது உண்மையான சுயநிர்ணயக் கோரிக்கை,அதன் வாயிலான அரசியல் வாழ்வு கானல் நீராகப் போவதுதான் உண்மை.


இதனால் புலிகளுக்கு எதுவித நட்டமுமில்லை.

அவர்கள் தம்மிடம் ஒதுங்கிய பாரிய சொத்துக்களை-தமது பினாமிகளுடாக வெளிநாடுகளில் நிதியிட்டு நடாத்தப்படும் பெரு தொழிலகங்களோடு முதலீடு செய்து தப்பித்துக் கொள்வார்கள்,ஆனால், தமிழினத்தின் அரசியல் வாழ்வானது அதே இனவொடுக்குமுறை அரசியலாகவே இலங்கையரசால் முன்னெடுக்கப்பட்டு இந்த மக்கள் காணாமற்போவார்கள்.

இதை சமீப காலமாக நடைபெறும் கொலைகள் மூலம் நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.இனிவரும் யுத்தம் தமிழ் பேசும் மக்களுக்கான விடிவைத் தருவதற்கானதாக இருக்கப் போவதில்லை.


இது தமிழ் பேசும் மக்களின் உண்மாயான சுயநிர்ணயப் போரைத் தமது இயக்க-வர்க்க நலனுக்காகக் கையிலெடுத்துத் தமிழரின் அப்பாவிக் குழந்தைகளைப் படையணியாக்கிய புலிகளுக்கும், அவர்களின் எஜமானர்களுக்குமான பேரத்தில் நமது மக்களின் குழந்தைகளை இழப்பதாகவும் அந்த இழப்பில் அடைய முனையும் அரசியல் "தீர்வு" எழிச்சியடைய முனையும் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கத்தைப் வேரோடு பிடுங்கி எறியும் அரசியலைக் கொண்டிருப்பதற்கானவொரு படையணியாக்வும்-அதிகாரத்தைக் கைப்பற்றிய சக்தியாகவும் புலித் தலைமையை விட்டுவைக்க முனையலாம்.

கருணாநந்தன் பரமுவேலன்.

No comments: